தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் கொடுத்துள்ள வெற்றி எங்களுக்கு உற்சாகம் அளிப்பதாகவும், ஊக்கமளிப்பதாகவும் உள்ளது. மேலும் உங்களுக்காக உழைக்கத் தூண்டுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்காக அக்டோபர் 6, 9 ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என 4 பதவிகளுக்கு இந்த தேர்தல் நடந்தது.

இதனையடுத்து வாக்கு எண்ணிக்கை நேற்று (12.10.2021) காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே அனைத்து மாவட்ட ஊராட்சிகளிலும், ஒன்றிய ஊராட்சிகளும் திமுக முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் மொத்தம் தேர்தல் நடந்த 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 138 இடங்களை கைப்பற்றி உள்ளது. எதிர் கட்சியான அதிமுகவுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதாவது செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்தில் அதிமுக வென்றுள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 16 இடங்களில் திமுக 15 இடங்களையும், அதிமுக ஒரு இடத்தையும் வென்றுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 28 கவுன்சிலர் பதவிகளில் திமுக 27 இடங்களையும், அதிமுக ஒரு இடத்தையும் கைப்பற்றி இருக்கின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 கவுன்சிலர் பதவிகளையும் திமுக கைப்பற்றி இருக்கிறது. இதே போல் வேலூர் மாவட்டத்திலும் மொத்தம் உள்ள 14 இடங்களையும், ராணிப்பேட்டையில் மொத்தம் உள்ள 13 இடங்களையும், கள்ளக்குறிச்சியில் மொத்தம் உள்ள 19 இடங்களையும்,

திருப்பத்தூரில் மொத்தம் உள்ள 13 இடங்களையும், நெல்லையில் மொத்தம் உள்ள 12 இடங்களையும், தென்காசியில் மொத்தம் உள்ள 14 இடங்களையும் திமுக கைப்பற்றி உள்ளது. இதன்படி 7 மாவட்டங்களில் திமுக ஒட்டு மொத்த கவுன்சிலர் பதவிகளையும் தன்வசப்படுத்தி உள்ளது.

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 1,521 இடங்களில் திமுக கூட்டணி 1,145 இடங்களில் வென்றுள்ளது. அதே நேரத்தில் பிரதான எதிர்கட்சியான அதிமுக மிக குறைந்த இடங்களையே கைப்பற்றி உள்ளது.

அதிமுக 214 இடங்களையும், பாமக 45 இடங்களையும், அமமுக 5 இடங்களையும், தேமுதிக 1 இடத்தையும் கைப்பற்றி இருக்கின்றன. சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 96 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளன.

9 மாவட்டங்களிலும் உள்ள ஒன்றியங்களில் கிட்டதட்ட அனைத்து ஒன்றியங்களையுமே திமுக கைப்பற்றுகிறது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் இரு பதவிகளையும் சேர்த்து 95 சதவீத இடங்களை திமுக கைப்பற்றி உள்ளது.

ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த 27 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரிய வெற்றியை பெற்று இருந்தாலும், இந்த அளவுக்கு மிக அதிக இடங்களை கைப்பற்றவில்லை. ஆனால் இந்த 9 மாவட்ட தேர்தலில் திமுகவுக்கு கிடைத்தது இமாலய வெற்றியாக கருதப்படுகிறது.

சட்டசபை தேர்தலில் வென்று திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு கிடைத்துள்ள இந்த வெற்றி, திமுக அரசுக்கு மக்கள் கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறது திமுக அரசு என்ற நம்பிக்கையுடன் வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மகத்தான மாபெரும் வெற்றியைப் பெற்று வரும் செய்தி கடந்த ஐந்துமாத கழக ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று ஆகும்.

சாதனைச் சரித்திரம் தொடர்வதற்கு மட்டுமல்ல, செய்த சாதனைகளுக்கான மக்களின் அங்கீகாரமாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபோது கொரோனா என்ற கொடிய தொற்று பரவிய காலமாக இருந்தது.

ஒரு பக்கம் மருத்துவ நெருக்கடி – இன்னொரு பக்கம் பொருளாதார நெருக்கடி. இரண்டும் சூழ்ந்த இக்கட்டான காலகட்டத்தில் கழக அரசு அமைந்தது. கொரோனாவை வென்றோம். பரவலைக் கட்டுப்படுத்தினோம். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிதி உதவி அளித்தோம். அனைத்துத் தரப்பினரின் தேவைகளையும் அறிந்து நிறைவேற்றிக் கொடுத்தோம்.

ஆட்சிப் பொறுப்பேற்கும்போது இருந்த நிதி நெருக்கடி என்பது சொற்களால் சொல்ல முடியாதது ஆகும். கஜானா காலியான நிலை மட்டுமல்ல, கடனுக்கு மேல் கடன் வாங்கியதன் மூலமாக வட்டிக்கு மேல் வட்டி கட்ட வேண்டிய நிலையில் ஆட்சியை வைத்துவிட்டுப் போயிருக்கிறது கடந்த கால அதிமுக அரசு. அதற்காக நிதிநெருக்கடியைக் காரணமாகக் காட்டி தப்பிக்கப் பார்க்க வில்லை நாங்கள்.

மிகக்கடுமையான நிதிநெருக்கடி இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டினோம்; நிறைவேற்றியும் வருகிறோம். நாள்தோறும் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து வருகிறோம். இந்த உழைப்புக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் தான் வெற்றி!

நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவோம். தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் கொடுத்துள்ள வெற்றி எங்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது. ஊக்கமளிப்பதாக உள்ளது. மேலும் உங்களுக்காக உழைக்கத் தூண்டுகிறது.

இந்த மாபெரும் வெற்றிக்காக உழைத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர், அனைத்துக்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சக்கணக்கான உடன்பிறப்புகள், தொண்டர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நெஞ்சத்தின் அடியாழத்தில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வெற்றி உங்கள் உழைப்பால், வியர்வையால் கிடைத்ததாகும். தமிழினத் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே நாங்கள் என்பதை உங்களது உழைப்பால் நிரூபித்துக் காட்டி விட்டீர்கள். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பதுகூட பழைய மொழிதான். இந்தப் படை ஒன்றே வெல்லும் படை என்பதை புதிய மொழியாக்கிப் புறப்பட்டுள்ளீர்கள்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கழக அரசு ஏராளமான திட்டங்களை மக்களுக்கு நிறைவேற்றி வருகிறது; இனியும் நிறைவேற்றித்தரப் போகிறது. இந்தத் திட்டப்பணிகளைக் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத்தான் இருக்கிறது.

எத்தகைய நல்ல திட்டங்களை கோட்டையில் இருந்து உத்தரவிட்டாலும் அதனைக் குக்கிராமத்தில் வாழும் மக்களின் வாசலில் நிறுத்த வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளே; அதன் பிரதிநிதிகளான நீங்கள்தான். அதனை நெஞ்சில் வைத்து நீங்கள் அனைவரும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வெற்றிக் கொண்டாட்டங்கள் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தா வகையில் அமையட்டும் என்று கேட்டுக் கொண்டு, மக்கள் தொண்டு ஒன்றே நமது செயல்பாடுகள் என்று மக்கள் கொண்டாடும் வகையில் நமது பணிகள் அமையட்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்போம்! மக்களைக் காப்போம்!” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.