உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை அறிவிக்காதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் உள்ளாட்சி தேர்தலை சென்ற வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது.

ஆனால் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. 

அதன்பின் மீண்டும் நவம்பர் 17-ம் தேதிக்குள்  (கடந்த ஆண்டு) உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தேர்தல் நடத்தப்படவில்லை. ஆகையால் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாத, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. 

இந்த வழக்கு பல முறை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 1996-ம் ஆண்டு வார்டு வரையறை அடிப்படையில் தேர்தலை அறிவிக்க எது தடுக்கிறது என்றும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவிட்டு வழக்கு நவம்பர் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.