மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று கட்டுங்கடங்காத வேகத்தில் பரவி வருகிறது. நாடு முழுவதும் ஒட்டு மொத்த பாதிப்பு 18 லட்சத்தை நெருங்குகிறது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 37,560 ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு சுமார் 15 ஆயிரத்தை நெருங்குகிறது.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மருத்துவர்கள், காவலர்கள் என அனைத்து தரப்பிலும் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் முன்னாள் அமைச்சர் கொரோனாவுக்கு பலியானார்.

உ.பி.யில் பாஜக அமைச்சர் கமல் ராணி இன்று கொரோனாவால் உயிரிழந்தார். தமிழகத்திலும் ஆளுநர் பன்வாரிலாலுக்கு இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அமித்ஷா தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளார். மேலும் தம்முடன் இருந்தவர்கள், சந்தித்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர் கொரோனாவால் பலி; அயோத்தி பயணத்தை ரத்து செய்த முதல்வர் யோகி