இந்தியாவில் 2019ல் நிகழ்ந்த சாலை விபத்துகள் தொடர்பான புள்ளிவிவரத்தை சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், 2019ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை விபத்துகள் மூலம் 53,872 பேர் உயிரிழந்துள்ளனர். மாநில நெடுஞ்சாலை விபத்துகள் மூலம் 38,472 பேர் பலியாகி இருக்கின்றனர்.

நாட்டின் மொத்த சாலை நெட்வொர்க்கில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு வெறும் 2 சதவீதம் மட்டுமே. ஆனால் இதில் கடந்த ஆண்டு நிகழ்ந்த விபத்துகளின் எண்ணிக்கை 36%. இவற்றில் பெரும்பாலும் நான்கு வழிச்சாலைகளில் நிகழ்ந்துள்ளன. இதேபோல் மாநில நெடுஞ்சாலைகளின் பங்கு 5 சதவீதம் மட்டுமே. ஆனால் இவற்றில் விபத்துகளின் எண்ணிக்கை 55 சதவீதம் ஆகும்.

இவற்றின் பின்னணியில் அதிவேகமாக வாகனங்களில் பயணித்தது தான் முதன்மையான காரணமாக இருக்கிறது. அதற்கடுத்து தவறான திசையில் வாகனங்களில் பயணித்தது காரணமாக இடம்பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து மது அருந்தி விட்டு வாகனத்தில் பயணித்தது அதிகளவில் விபத்துகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு 2,376 பேர் மது அருந்தி வாகனம் ஓட்டியதால் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த விபத்துகளில் சாலையோரம் நடந்து சென்ற 7,749 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் இரு சக்கர வாகனத்தில் பயணித்த 18,000 பேர் பலியாகியிருக்கின்றனர். மேலும் 18 வயதுக்கு உட்பட்ட 11,168 பேர் கடந்த ஆண்டு பல்வேறு விபத்துகளின் மூலம் உயிரிழந்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 31 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இது 2018ஆம் ஆண்டை விட 12% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதி பெண் பலி