அதிக உறுதியும், விரைவாக உலரும் தன்மையும், அதிக வெப்பத்தை தாங்கும் தன்மையும் கொண்ட தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர புதிய ரக சிமெண்ட் வலிமையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (16.11.2021) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர ரக சிமெண்ட் “வலிமை”யை அறிமுகப்படுத்தி, விற்பனையை துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆலங்குளம் சிமெண்ட் ஆலை, ஆண்டொன்றுக்கு 2 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறனுடன், அப்போதைய முதல்வர் கருணாநிதியால் 1970 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தால், அரியலூரில் ஆண்டொன்றுக்கு லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி திறனுடன் ஒரு ஆலையும், 10 லட்சம் மெட்ரிக் டன் திறன் கொண்ட மற்றொரு புதிய சிமெண்ட் ஆலையும் நிறுவப்பட்டது.

இந்த மூன்று ஆலைகளின் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டொன்றுக்கு 17 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகம் “அரசு” என்ற பெயரில் சிமெண்டை விற்பனை செய்து வருகிறது.

2021-22ஆம் ஆண்டு தொழில் துறை மானியக் கோரிக்கையின் போது, ‘வலிமை’ என்ற பெயரில் ஒரு புதிய ரக சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படும் என்று தொழில் துறை அமைச்சர் ஓர் அறிவிப்பினை வெளியிட்டார்.

அதன்படி, தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர ‘வலிமை’ சிமெண்ட் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய ரக வலிமை சிமெண்ட், அதிக உறுதியும், விரைவான உலரும் தன்மையும், அதிக வெப்பத்தை தாங்கும் தன்மையும் கொண்டது.

இந்நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் , தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் நிர்வாக இயக்குநர்அனில் மேஷ்ராம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துன்கொண்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மார்க்கெட்டில் சுமார் 100 ரூபாய் விலை குறைவாக கிடைக்கும் வலிமை சிமெண்ட்டை வாங்க மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கினால், தனியார் சிமெண்ட் நிறுவனங்களும் விலையை குறைக்க வேண்டிவரும். குறிப்பிட்ட சில நிறுவனங்கள் சிமெண்ட் விலையை பன்மடங்கு உயர்த்தி வந்த நிலையில், அதற்கு கடிவாளம் போட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.