உத்தரப் பிரதேசத்தில் உள்ள பள்ளியில் இந்து ராஷ்டிரம் பெயரில் “இந்து ராஷ்டிரா அமைக்கப் போராடு, அதனை எதிர்ப்பவர்களை கொல்ல உயிர் தியாகம் செய்” என்று மாணவர்களை உறுதிமொழி ஏற்கச் செய்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்து பன்முகத்தன்மைக் கொண்ட இந்தியாவை இந்து ராஷ்டிராவாக மாற்றவேண்டும் என்பதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை தீட்டி அதனை செயல்படுத்தி வருகிறது.

இருப்பினும் ஒன்றிய பாஜக அரசின் செயல்பாடுகளுக்கு மக்களிடையே எழும் எதிர்ப்பை அடுத்து பின்வாங்குவதையும் பாஜக, ஆர்எஸ்எஸ் உட்பட இந்து அமைப்புகள் வழக்கமாக கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பள்ளியில் இந்து ராஷ்டிரம் பெயரில் மாணவர்களை உறுதிமொழி ஏற்கச் செய்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் அங்கு பாஜகவின் ஆட்சியே நீடிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் பல தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களிடையே மதநல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இந்து ராஷ்டிரா பேரில் உறுதிமொழி ஏற்கச் செய்திருக்கின்றன. அதன்படி உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் உள்ள தனியார் பள்ளியான விமலா இன்டர் காலேஜ்ஜில் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

அதில், “இந்து ராஷ்டிரா அமைக்கப் போராடு, அதனை எதிர்ப்பவர்களை கொல்ல உயிர் தியாகம் செய்” எனக் கூறி உறுதிமொழி ஏற்றிருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோவை அம்மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சன் செய்திகள் என்ற இந்தி தொலைக்காட்சியின் ஆசிரியர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுபான்மையினருக்கு எதிராக நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கில் செயல்படும் ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற இந்துத்துவவாதிகளின் இச்செயலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.