பீகாரில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில், தாய் உயிரிழந்தது தெரியாமல் துணியால் மூடப்பட்டிருக்கும் சடலத்துடன் குழந்தை விளையாடிக்கொண்டிருக்கும் காட்சிகள் காண்பவர்களின் மனதை கனக்க செய்கிறது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட, ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் துயரக் கதை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டு செல்கிறது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையில்லாமல், உணவில்லாமல், தங்குவதற்கு இடமில்லாமல், தங்களது சொந்த ஊர் திரும்பி செல்ல போக்குவரத்து வசதிகளும் இல்லாமல் தவித்தனர்.

இதையடுத்து, ஆயிரக்கணக்கான கி.மீ தொலைவில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தும், சைக்கிளிலும் செல்ல தொடங்கினர். இதில், பலர் தங்களது சொந்த ஊருக்கு சென்றடைவதற்கு முன்னரே சாலை விபத்திலோ, அல்லது பசியிலோ பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று, குஜராத்தில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரயிலில் புலம்பெயர் தொழிலாளர்கள் புறப்பட்டுள்ளனர். அதில் பயணித்த பெண் ஒருவர் கடும் வெப்பம் மற்றும் பசியால் திங்களன்று, ரயில் அவர் இறங்க வேண்டிய முசாபர் நகரை அடைவதற்கு சற்று நேரம் முன்பு சரிந்து விழுந்துள்ளார்.

கடும் வெப்பம் மற்றும் பசியால் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு ரயில் நிலையத்தை அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அவரது சடலம் ரயில் நிலையத்தின் நடைபாதையில் எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

தாய் உயிரிழந்தது தெரியாமல் அவரது சடலம் மூடப்பட்டிருக்கும் துணியை இழுத்து அந்த பெண்ணின் குழந்தை சடலத்துடன் விளையாடிய படியும், அவரை எழுப்பிய படியும் இருந்தது. அந்த குழந்தையின் கையுடன் மூடப்பட்டிருக்கும் துணி வருகிறது. ஆனால், அந்த குழந்தையின் தாய் வரவில்லை.

[su_youtube url=”https://www.youtube.com/watch?v=jWNUctGQ14s” width=”700″ autoplay=”yes” title=”உணவு தண்ணீர் இல்லாமல் உயிரிழந்த தாய்; சடலத்துடன் விளையாடிய குழந்தை”]

இதுதொடர்பாக உயிரிழந்த அந்த பெண்ணின் உறவினர்கள் கூறும்போது, அவர் ரயிலில் இருக்கும்போதே போதிய உணவில்லாததாலும், தண்ணீர் இல்லாததாலும், உடல்நலம் சரியில்லாமல் இருந்தார் என்கின்றனர். இதே ரயில் நிலையத்தில், அண்மையில் 2 வயது குழந்தை போதிய உணவில்லாமல், கடும் வெப்பத்தால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: உ.பி. தொழிலாளர்களை பிற மாநிலங்கள் வேலைக்கு அமர்த்த அதிரடி நிபந்தனை விதித்த யோகி ஆதித்யநாத்