ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க தொடங்கியதிலிருந்தே புதுப்புது பாடகர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறார்.

தற்போது ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில், “உங்களுக்கு இசையில் பேரார்வம் இருக்கிறதா? இருந்தால், நீங்கள் மேடை ஏறுவதற்கான தருணம் இது. நாங்கள் ஒரு நட்சத்திர பாடகரை தேடிக்கொண்டிருக்கிறோம். அது நீங்கள் தான் எனில், உங்களது முழு விவரங்களையும் இங்கே ARRived தெரிவிக்கவும்” என்று பதிவிட்டுள்ளார்.

அதில், பெயர், தொடர்பு எண், இ-மெயில் ஐடி மற்றும் உங்களுடைய வீடியோ ஆகியவற்றை பதிவேற்றி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். பாடல் வீடியோ மூன்று நிமிடங்களுக்கு மேல் இருக்கக்கூடாது. தனியாக பாடிய வீடியோ மட்டுமே அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப செப்டம்பர் 25 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பிக்கப்படும் போட்டியாளர்களிலிருந்து பல்வேறு சுற்றுகளுக்குப் பிறகு நான்குபேர் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று, அதில் தேர்வு பெறும் போட்டியாளர் ஏஆர்.ரஹ்மானின் இசையில் பாடும் வாய்ப்பைப் பெறுவார்.

இந்த நிகழ்ச்சியை க்யூக்கி என்ற நிறுவனம் நடத்துகிறது. இறுதி தேர்வு மும்பையில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.