உக்ரைன்- ரஷ்யா போர் காரணமாக, உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க விதிகளில் இடமில்லை என ஒன்றிய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்விகளில் இடம் கிடைக்காத மாணவர்கள், அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன், பிலிப்பைன்ஸ், சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பட்டமேற்படிப்புகாக செல்கின்றனர். அந்த வகையில் உக்ரைன் நாட்டில் ஏராளமான மாணவர்கள் தங்கி பயின்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன்- ரஷ்யா இடையே போர் வெடித்தது. இதனால் அங்கு படித்து வந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது படிப்பை பாதியில் கைவிட்டு நாடு திரும்பியதால், அந்த மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியானது.

குறிப்பாக உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்றுவந்த 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போர் காரணமாக நாடு திரும்பியதால், அவர்கள் இந்திய மருத்துவ கல்லூரிகளில் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் இருந்தும், போர் காரணமாக உக்ரைனில் இருந்தும் நாடு திரும்பிய இந்திய மாணவர்களை இந்திய கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசும் மௌனமாகவே இருந்து வந்தது, இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது மக்களவை உறுப்பினர் கவிதா மலோத், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை கல்லூரியில் சேர்க்கும் மாநில அரசின் முடிவுக்கு ஏன் தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கவில்லை என்றும்? நாடு திரும்பிய மாணவர்களை கல்லூரிகளில் சேர்ப்பதற்கு ஒன்றிய அரசிடம் ஏதேனும் இருக்கிறதா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், “உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் இந்திய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தங்கள் படிப்பைத் தொடர விதிகளில் இடமில்லை. உக்ரைன் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் மாணவர்கள் இந்தியாவில் சேர முடியாது

மேலும், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 மற்றும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019ன் விதிமுறைகளில் எந்தவொரு வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்களிலிருந்தும் மருத்துவ மாணவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்றுவதற்கான விதிகள் எதுவும் இல்லை.

இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், வெளிநாடுகளில் இருந்து வந்த மாணவர்களை சேர்ப்பதற்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை. அதேசமயம் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள பிற கல்லூரிகளில் மருத்துவம் படிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது” என்று இணையமைச்சர் தெரிவித்துள்ளார்