தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படும் “இளையராஜா 75” இசை நிகழ்ச்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார்.

இசைஞானி இளையராஜா இந்த ஆண்டு தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள இளையராஜாவை பெருமைப்படுத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இளையராஜா 75 நிகழ்ச்சி, பிப்ரவரி 2, 3ம் தேதிகளில் நடக்கிறது.

நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் விழாவில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் பங்கேற்கின்றனர். திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச் செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ் ஆகியோர் ராஜ்பவனிற்கு சென்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து விழாவை தொடங்கி வைக்குமாறு அழைப்பு விடுத்தனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் அழைப்பை ஏற்று, பிப்ரவரி 2-ஆம் தேதி இந்த விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்கிறார். மேலும், இளையராஜா 75 என்ற விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.

தொடர்ந்து முன்னணி நடிகைகளின் நடன நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மறுநாள் பிப்ரவரி 3-ந் தேதி இளையராஜா நேரடி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.