எந்திரன் படக் கதை திருட்டு வழக்கு விசாரணைக்காக இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கவில்லை என்றும், தங்களது இணையதளத்தில் வெளியிடப்பட்ட தவறான பதிவு நீக்கப்படும் என்றும் எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தின் கதை தொடர்பாக இயக்குனர் ஷங்கருக்கு எதிராக எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன் எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி சந்தோஷ் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் ஷங்கர் விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பதிவிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த பிடிவாரண்டை திரும்பப் பெறக் கோரி இயக்குனர் ஷங்கர் சார்பில் வழக்கறிஞர் சாய்குமரன் ஆஜராகி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்தோஷ், இயக்குனர் ஷங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படவில்லை. நோட்டீஸ் மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டிய அவசியமில்லை. ஷங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக நீதிமன்ற இணையதளத்தில் வெளியான தவறான பதிவு நீக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதிமன்ற இணையதளத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறு காரணமாக எனக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதுதொடர்பாக எனது வழக்கறிஞர் சாய்குமரன் நீதிமன்றத்தில் முறையிட்டதன் காரணமாக அந்த தவறான பதிவு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றம் எனக்கு எதிராக எந்த பிடிவாரண்டும் பிறப்பிக்கவில்லை. இந்த விஷயம் எனக்கு தேவையில்லாத மன உளைச்சலை தந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கதை திருட்டு வழக்கில் இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட்- நீதிமன்றம்