மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியன் செல்வன் படத்தில் பெரும் நட்சத்திரப் பட்டாளம் இணைந்திருக்கும் நிலையில், இரண்டாம் முறையாக தமிழின் முன்னணி நடிகை ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்கி என்கின்ற கிருஷ்ணமூர்தி அவர்களால் எழுதப்பட்ட “பொன்னியின் செல்வன்” என்ற பிரம்மாண்டமான நாவல் வெளிவந்து 70 ஆண்டுகளை கடந்துவிட்டது. இந்த நாவல் ஐந்து பாகங்களாக வெளிப்பட்டிருந்தது. இக்கதை, முழுக்க முழுக்க சோழர்களை மையமாக வைத்து எழுதப்பட்டது. கதை நகர்த்தப்பட்டிருந்த விதமும் கதாப்பாத்திரங்களின் விரிவுரையும் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டதே பொன்னியின் செல்வனின் வெற்றி எனலாம்.

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தேர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி, அருள்மொழிவர்மன் கேரக்டரில் ஜெயம் ரவி, பூங்குழலி கேரக்டரில் நயன்தாரா, சுந்தரசோழன் கேரக்டரில் அமிதாப்பச்சன், ஆகியோர் நடிக்கவுள்ளனர். அதேபோல் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினி வேடத்தில் ஐஸ்வர்யா ராய், பழுவேட்டரையர் வேடத்தில் சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

மேலும் நடிகர் ஜெயராம், அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். இந்த கூட்டணியில் தற்போது நடிகை த்ரிஷாவும் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. த்ரிஷா என்ன கேரக்டரில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

ரூபாய் 800 கோடி செலவில் உருவாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை சில வருடங்களுக்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்பொழுது இப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இயக்குனர் மணிரத்னம், இப்படத்திற்கான முன் தயாரிப்பு வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.