வெர்மான்ட் பல்கலைக்கழகம், டஃப்ட் பல்கலைக்கழகம், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் விஸ் இன்ஸ்டிட்டியூட் ஃபார் பயலாஜிகலி இன்ஸ்பைர்டு இன்ஜினியரிங் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் சேர்ந்து புதுவகையான உயிரியல் மறு உற்பத்தி முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த முறையைப் பயன்படுத்தி சாம் க்ரீக்மேன், டக்ளஸ் பிளாக்கிஸ்டன், மைக்கேல் லெவின், ஜோஷ் பொங்கார்ட் என நான்கு விஞ்ஞானிகள் இணைந்து, உலகிலேயே முதல் முறையாக இனப்பெருக்கம் செய்யும் ரோபோட்டுகளை உருவாக்கியுள்ளார்கள்.

தவளை செல்களில் இருந்து ஜெனோபோட் (Xenobots) என்று அழைக்கப்படும் உயிருள்ள ரோபோட்டுகளை உருவாக்கி 2020ல் அறிவித்த விஞ்ஞானிகள் குழு, தற்போது இனப்பெருக்கம் செய்யும் ரோபோட்டுகளை உருவாக்கியுள்ளது.

சிறு தட்டு ஒன்றில் நீந்திச் சென்று, நூற்றுக்கணக்கான தனித்தனி செல்களை ஒன்று திரட்டி தங்கள் வாய் பகுதியில் புதிய குழந்தை ரோபோட்டுகளை இவை உருவாக்குகின்றன.

இந்த குழந்தை ரோபோட்டுகள் சில நாள்களில் வெளியே வந்து தாய் ஜெனோபோட்டுகள் போலவே நகரவும் செயல்படவும் தொடங்குகின்றன.

தவளையின் கருவில் உள்ள ஸ்டெம் செல்லை எடுத்து இவற்றை முதலில் விஞ்ஞானிகள் உருவாக்கினர். ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அகலமுள்ள ஜெனோபோட்டுகள் முன்பே தாமாக நீந்திச்செல்லவும், நகரவும், தங்களைத் தாங்களே குணப்படுத்திக்கொள்ளவும் கூடியதாக இருந்தன.

தற்போது புதிய கண்டுபிடிப்பில் இந்த ஜெனோபோட்டுகள் இனப்பெருக்கம் செய்யக் கூடியவையாக உருவாக்கப்பட்டுள்ளன.

தவளையின் ஜெனோம் இந்த ஜெனோபோட்டுகளில் இருந்தாலும் இவை தலைப்பிரட்டையாக மாறாது. தவளை இனப்பெருக்கம் செய்வது போல அல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இவை இனப்பெருக்கம் செய்கின்றன.

முதலில் உருவாக்கப்படும் தாய் ஜெனோபோட் 3 ஆயிரம் செல்களால் ஆனது. இந்த இனப்பெருக்கம் செய்யும் ரோபோட்டுகள் கணினி உதவியால் வடிவமைக்கப்பட்டு, பிறகு பொருத்தப்பட்டவை.

மேலும் தவளை இனப்பெருக்கம் செய்வது போல் அல்லாமல் முற்றிலும் மாறாக இனப்பெருக்கம் செய்கின்றன. இதுவரை அறிவியல் பூர்வமாக எந்த விலங்குகளும் தாவரங்களும் இப்படி இனப்பெருக்கம் செய்வதில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.