‘இந்திய அரசை காணவில்லை’ என நாட்டின் முதன்மை பத்திரிகைகளில் ஒன்றான அவுட்லுக் இந்தியா பத்திரிகை முதல் பக்க அட்டைப்படம் வெளியிட்டுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் நிலவும் கொரோனா பெருந்தொற்று நெருக்கடியால் தினசரி லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொரோனாவால் பலியாகி வருகின்றனர். நாடு முழுவதும் தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் ஆகியவற்றிற்கு மிகப் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசு இந்த பேரிடர் காலத்தை கையாளும் விதம் குறித்து உலக அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. நிபுணர்கள் முன்கூட்டியே இந்த 2 ஆம் அலை குறித்து எச்சரித்தும் மோடி அரசு அலட்சியம் காட்டியது பலரின் கண்டனத்திற்கும் உள்ளானது.

இந்த பெருந்தொற்று காலத்தில் அரசியல் கூட்டங்கள், மத கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்களுக்கு அனுமதி அளித்ததே இந்த கடும் பாதிப்புகளுக்கு காரணம் என பலர் விமர்சித்துள்ளனர்.

நாட்டில் கொரோனா தொற்று 2வது அலையின் தாக்கத்தால் கொத்து கொத்தாக மரணங்கள் நிகழ்கின்றன. பல மாநிலங்களில் இறந்த உடல்களை எறிப்பதற்கு இடமில்லாமல் தவிக்கும் அவலநிலை உள்ளது. மின்மயானங்களில் சடலங்கள் 24 மணிநேரமும் எரிந்து கொண்டிருக்கும் காட்சிகள் மனதை வலிக்கச் செய்கிறது.

குறிப்பாக பாஜக ஆளும் உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் கொரோனாவால் இறந்தவர்களை எறிப்பதற்கு பணம் இல்லாமல், கங்கை நதியில் சடலங்களை எரியும் அவலநிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது 3வது அலைக்கும் வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நாட்டில் இவ்வளவு துயரங்கள் நடந்து கொண்டிருக்கும் போது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இதை கையாள சரியான நடவடிக்கை மேற்கொள்ளாததை விமர்சிக்கும் வகையில் அவுட்லுக் இந்தியா “இந்திய அரசை காணவில்லை” என கவர் போட்டோ வெளியிட்டுள்ளது.

அந்த அட்டைப்படத்தில்,

‘காணவில்லை’

பெயர் : இந்திய அரசு

வயது : 7 வருடங்கள்

தகவல் : இந்திய குடிமக்கள்

(கண்டுபிடித்தால் இந்திய குடிமக்களிடம் தகவல் தெரிவியுங்கள்)- என மே 24, 2021 ‘அவுட் லுக்’(Outlook) ஆங்கில இதழ் வெளியிட்டுள்ள இந்த முதல் பக்க அட்டைப் படம் தற்போது இந்தியா முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கங்கையில் மிதக்கும் கொரோனா சடலங்கள்; உ.பி., பீகார் மாநிலங்களுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்