நாடு முழுவதும் 3,500 அரசுப்பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் இந்தியாவின் முதல் ஹைப்ரிட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

செங்கல்பட்டு அருகே பட்டிபுலம் கிராமத்தில் இருந்து இன்று (19.02.2023) காலை 8.15 மணிக்கு ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இன்டர் நேஷனல் பவுண்டேஷன் சார்பில் இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் 150 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் எனப்படுவது குறைந்த உயரத்தில் செலுத்தக் கூடியதாகவும், சோதனை ஓட்டத்திற்கு பயன்படுத்துவதற்காகவும், செயற்கைக்கோள்களின் தரவுகளை சேகரிப்பதற்காகவும் அனுப்பப்படுகிறது.

இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஹைபிரிட் சவுண்ட் ராக்கெட் சுமார் 2.4 கி.மீ. உயரம் வரை செல்லக் கூடியது. இந்த ராக்கெட்டில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் 3,500 பேர் இணைந்து தயாரித்த 150 சிறிய ரக செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணில் ஏவப்பட்டு உள்ள சிறிய ரக செயற்கைக்கோள்கள் மூலம் வானிலை, கதிர்வீச்சு தன்மை, வளிமண்டல நிலை உள்ளிட்ட பல்வேறு தரவு களை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி கோகுல் ஆனந்த் தலைமையிலான இஸ்ரோ தொழில்நுட்ப விஞ்ஞானிகள் இந்த ராக்கெட்டை இயக்கினர். இதில் தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இயக்குனர் வெங்கட்ராமன், திருப்போரூர் எம்.எல்.ஏ.பாலாஜி ரோஸ் மார்ட்டீன், ஜோஸ் சார்லஸ் மார்ட்டீன், ஏ.பி.ஜெ.எம்.நஜீமா மரைக்காயர், ஷேக்ச லீம், ஷேக்தாவூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செயற்கைக்கோள் விண்ணில் பாய்வதை பார்ப்பதற்காக அதனை தயாரித்த மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் குஜராத், பெங்களூர், ஜெய்பூர், கேரளா, ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநில மாணவர்கள், அணுசக்தி துறையினர் சுமார் 5 ஆயிரம் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறும் போது, “செயற்கை கோள் புரட்சியை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இது மாணவர்களால் செயற்கைக்கோள் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கைக்கான வித்து.

விண்வெளி ஆராய்ச்சித் துறையில் மாணவர்கள் குழுவாக செயல்பட முடியும். மாணவர்களின் குழு மனப்பான்மையை வளர்க்கும் விதமாக இது உள்ளது. மாணவர்கள் துறை ரீதியாக சாதிக்க பள்ளியில் இருந்து தொடங்க வேண்டும்.

சிறு வயது முதலே அனைவருடனும் இணைந்து செயல்படுவதற்கான பயிற்சி. தற்போது செயற்கை கோள் புரட்சி ஏற்பட்டு உள்ளது. பொறியாளர்களை பள்ளியிலேயே உருவாக்க வேண்டும். செயற்கைக்கோள்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது” என்றார்.