இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற கோரிய பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூன்.2ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

சுதந்திரத்துக்கு முன் ஒன்றிணைந்த இந்தியாவிற்குள் ஓடிய சிந்து நதியின் பெயராலேயே இந்தியா என நம்முடைய நாடு அழைக்கப்பட்டது. சிந்து என்ற சொல்லை உச்சரிக்க இயலாமல் பாரசீகர்கள் அதனை இந்து என்று அழைத்ததாகவும், இதுவே பின்னர் இந்தியா என்று மறுவியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவின் பெயரை மாற்ற கோரி உச்ச நீதிமன்றத்தில் நமா என்பவர் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். மனுவில், ‘இந்தியா’ என்ற ஆங்கில பெயர் காலனி ஆதிக்கத்தை நினைவுபடுத்துவதாக உள்ளதாகவும், நாட்டு மக்கள் காலனி ஆதிக்க சிந்தனையில் இருந்து வெளிவர நாட்டின் பெயரை ‘பாரத்’ என மாற்ற வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் கடுமையான போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நமது தேசத்தின் பெயரை மாற்ற வேண்டும் என குறிப்பிட்டு, இந்தியா என்ற நமது நாட்டின் ஆங்கில பெயரை ‘பாரத்’ என மாற்றும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு ஜூன்.2ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: PM Cares Fund- அரசாங்க நிதி அல்ல; சொல்கிறது பிரதமர் அலுவலகம்