பாஜக மோடி அரசு சமூகவலைத்தளத்தை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக விவாதிக்க செப்டம்பர் 2-ம் தேதி நேரில் ஆஜராகக் கோரி ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.

அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் கடந்த 14-ம் தேதி வெளியிட்ட செய்திக் கட்டுரையில், இந்திய ஃபேஸ்புக் நிர்வாகம் ஆளும் பாஜக மோடி கட்சியைச் சேர்ந்த சிலர், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த சிலர் பேசும் வெறுப்புப் பேச்சுகளை வேண்டுமென்றே கண்டுகொள்வதில்லை, தடை செய்வதில்லை. இதற்கு இந்திய பேஸ்புக் நிர்வாகத்தில் இருக்கும் அன்கி தாஸ் பின்னணியில் இருக்கிறார் என்று ஆதாரப் பூர்வமாகக் கூறியது.

இதையடுத்து, தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக இருக்கும் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே எதிர்ப்புத் தெரிவித்தார். நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம் கலந்தாலோசிக்காமல், தகவல் தொழில்நுட்ப நிலைக்குழுவின் தலைவராக உள்ள சசி தரூர், ஃபேஸ்புக் நிறுவன அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப உள்ளதாக பொதுவெளியில் பேசியுள்ளதற்காக அவரை நிலைக்குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறியுள்ளார்.

இந்த விவகாரம் இரு எம்.பிக்களுக்கும் இடையே பெரும் வார்த்தை மோதலாக உருவெடுத்து, இருவரும் ஒருவருக்கொருவர் உரிமைமீறல் பிரச்சினையை நாடாளுமன்றதுத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்திய மக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், சமூக ஊடகங்கள், ஆன்லைன் செய்தி ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல் டிஜிட்டல் தளத்தில் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு ஆகியவை குறித்து விவாதிக்க இருப்பதால், வரும் செப்டம்பர் 2-ம் தேதி நேரில் ஆஜராகக் கோரி, மக்களவைச் செயலாளர் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னதாக ஜம்மு காஷ்மீரில் இன்டர்நெட் இணைப்பு வழங்காமல் இருப்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக செப்டம்பர் 1-ம் தேதி ஜம்மு காஷ்மீர் நிர்வாக பிரதிநிதிகள், உள்ளிட்டோர் நேரில் ஆஜராகவும், தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: முதல்வர் யோகியின் ராம ராஜ்ஜியத்தில் தொடரும் பாலியல் வன்முறைகள்..