தேசியக் கொடி அவமதிப்பு தொடர்பான முன்ஜாமின் வழக்கில், இனி வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என உயர்நீதிமன்றத்தில் மன்னிப்புக்கோரி பிரமான பத்திரம் தாக்கல் செய்தார் நடிகர் எஸ்.வி.சேகர்.

பாஜக கட்சியை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், தேசிய கொடியில் உள்ள மூன்று வண்ணங்களையும் மதங்களையும் தொடர்புபடுத்தி பேசியிருந்தார். மேலும், முதல்வர் எடப்பாடி குறித்தும், அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், கருத்து தெரிவித்து வெளியிட்ட வீடியோ சர்ச்சையானது.

இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர், ஆன்லைன் வாயிலாக, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், யுடியூபில், நடிகர் எஸ்.வி.சேகர், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். எனவே எஸ்.வி.சேகர் மீது தேசியக்கொடி அவமதிப்பு சட்டத்தின் படி, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த புகார் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கொடியை அவமதித்ததாக, நடிகர் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதனால், கைது செய்யப்படலாம் என அச்சம் அடைந்த எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், காவல்துறையினரின் விசாரணைக்கும் 2 முறை ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், முன்ஜாமின் வழக்கு விசாரணையில், தேசியக் கொடியை அவமதித்ததற்காக மன்னிப்பு கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தால் நடிகர் எஸ்.வி.சேகர் கைது செய்யப்படமாட்டார் என சென்னை போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதையடுத்து செப்டம்பர் 7 வரை எஸ்.வி. சேகரை கைது செய்ய தடை விதித்த நீதிமன்றம், முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இந்நிலையில், எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், தமிழக முதல்வர் குறித்து பேசியதற்கும் வருத்தம் தெரிவித்துள்ள எஸ்.வி சேகர், தான் இனி வாழ்நாள் முழுவதும் ஒருபோதும் தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து எஸ்.வி.சேகரை கைது செய்ய ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 7ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க: நீட் தேர்வு விவகாரம்.. 6 மாநில அரசுகளின் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்