ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பேரை தனது நிர்வாகத்தில் இருந்து ஜோ பைடன் நீக்கியுள்ளது பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46வது அதிபராக கடந்த புதன்கிழமை ஜோ பைடன் பதவி ஏற்றார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவி ஏற்றுக்கொண்ட முதல் நாளிலையே, முஸ்லிம்களுக்கான தடை நீக்கம், பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் இணைவது, உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைதல், சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்குதல், மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் பணியை உடனடியாக நிறுத்துதல் உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஜோ பைடன், அடுத்தகட்ட நடவடிக்கையாக ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த இந்திய வமசாவளியைச் சேர்ந்த இரண்டு பேரை தனது நிர்வாகத்தில் இருந்து நீக்கியுள்ளதாக அமெரிக்காவின் ட்ரிப்யூன் (Tribune) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் ஜோ பைடன் தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் பணிபுரிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 20 பேரை பரிந்துரைந்துள்ளார். அமெரிக்காவின் மக்கள் தொகையில் இந்திய வம்சாவளியினர் வெறும் ஒரு சதவீதம் கூட இல்லாத நிலையில், இந்தியர்களுக்கு இத்தகைய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டுகிறது.

இந்நிலையில் பைடன் நிர்வாகத்தில் பணிபுரிய பரிந்துரைத்திருந்த பட்டியலில் இருந்து சோனல் ஷா மற்றும் அமித் ஜானி ஆகியோரது பெயர்கள் விடுபட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம், அவர்கள் இருவருமே ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் எனக் கூறப்படுகிறது.

இதில், சோனல் ஷாவின் தந்தை ஆர்எஸ்எஸ் நடத்தும் ஏகல் வித்யாலயா அமைப்பை தோற்றுவித்தவர். அதுமட்டுமல்லாது பாஜகவின் வெளிநாட்டு நண்பர்கள் குழுவின் அமெரிக்கப் பிரிவின் தலைவராகவும் சோனல் ஷாவின் தந்தை இருந்து வந்துள்ளார்.

முன்னதாக கடந்த டிசம்பர் மாதமே ஜோ பைடனுக்கு அமெரிக்காவில் உள்ள சுமார் 19 இந்திய அமைப்புகள் ஒன்றிணைந்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். அக்கடித்ததில், “இந்தியாவில் தீவிர வலதுசாரி அமைப்புகளுடன் தொடர்பில் உள்ள பலர் ஜனநாயகக் கட்சியில் இணைந்துள்ளனர்.

ஜோ பைடனின் நிர்வாகத்தில் இதுபோன்ற நபர்கள் இருப்பது ஆபத்தானது. எனவே அவர்களுக்கு இடமளிக்கக் கூடாது” என்று கூறி, சோனல் ஷா மற்றும் அமித் ஜானி ஆகியோரது பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் இருவரும் இந்துத்வா குழுக்களிடம் இருந்து நிதியுதவி பெற்றுள்ளதாகவும் இந்துத்வா ஆதிக்கத்திற்கு ஆதரவாக தங்களின் நிலைப்பாட்டை தெரிவித்து வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அதில் கூறியுள்ளனர்.

அதுமட்டுமல்லாது, இருவருமே ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் வெளிநாட்டு முகவர்கள் என்றும் டிரம்பின் எதிர்ப்பாளர்கள் போல் காட்டிக்கொண்டு சிறுபான்மையின மக்களுக்கு எதிராகவும் இந்தியாவில் மேலாதிக்கவாதிகளாவும் உள்ளவர்கள்.

அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடுவதைப் போல நடிக்கும் இவர்கள், இந்தியாவில் இனவெறியை நிலைநிறுத்துகிறார்கள். எனவே உங்கள் நிர்வாகத்தில் பணிபுரியும் அனைவரையும் கவனமாக தேர்ந்தேடுக்க வேண்டும்.

இந்துத்துவா மேலாதிக்கம் உட்பட எந்த மேலாதிக்கதையும் ஆதரிக்கும் நபரை நிர்வாகத்தில் இணைக்கக் கூடாது” என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளிலேயே சொன்னதை செய்த அதிபர் பைடன்