கர்நாடக பாஜக அமைச்சர் தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்ணை, மிரட்டி ஆபாசமாக நடந்துகொண்ட வீடியோக்கள் வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியதையடுத்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் பாஜக அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருப்பவர் ரமேஷ் ஜார்கிகோளி. கடந்த முறை 15 தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பெல்காம் மாவட்டம் கோகாக் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர்தான் இந்த ரமேஷ்.

இந்நிலையில், சமீபத்தில் அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், கர்நாடகாவில் இருக்கும் அணைகள் குறித்து ஒரு ஆவணப்படம் தயாரிப்பதற்காக, அணைகளை ட்ரோன் மூலம் காட்சிப் பதிவு செய்ய திட்டமிட்டிருக்கிறார். அதற்காக நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிகோளியை சந்தித்து அனுமதி கேட்டிருக்கிறார்.

அதற்கு பாஜக அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி, தன்னுடைய ஆசைக்கு இணங்கினால், உனக்கு அரசு வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறியதோடு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அமைச்சரின் மிரட்டலுக்கு பயந்து அந்தப் பெண் அவர் சொன்னபடி நடந்துகொண்டுள்ளார். பின்னர் அமைச்சர் அப்பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததோடு, வாட்ஸ்-அப் வீடியோ காலில் ஆபாசமாகவும் பேசியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோளி, அந்தப் பெண்ணின் வீட்டிற்கே சென்று குடும்பத்தையே மிரட்டியதாகவும் சொல்லப்படுகின்றது. இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த தினேஷ் கல்லஹள்ளி என்ற சமூக ஆர்வலரின் உதவியை நாடியுள்ளார் அந்தப் பெண்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் தினேஷ், கப்பன் பார்க் காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தபோது, அங்கே புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இதுவரை அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாதிக்கப்பட்ட பெண்ணையே வந்து நேரில் புகார் கொடுக்க சொல்லுங்கள். அப்போதுதான் நடவடிக்கை எடுப்போம்’ எனக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், பாஜக அமைச்சரின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மூன்று நான்கு நாட்களாக கர்நாடகாவின் அனைத்து செய்தி தொலைக்காட்சிகளும் அந்த வீடியோக்களை ஒளிபரப்பு செய்து, அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்கின்றன.

இந்த பாலியல் புகார் விவகாரம் பூதாகரமானதும், கடந்த புதன் கிழமையன்று தனது தம்பி பாலச்சந்தரின் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் எடியூரப்பாவிடம் கொடுத்தார் ரமேஷ். அந்த கடிதத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்ததாக முதல்வர் எடியூரப்பாவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய பதவி பறிபோனதற்கு காரணமான அந்தப் பெண்ணையும், சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளியையும் அமைச்சராக இருந்த ரமேஷ் மிரட்டி வருவதாகவும், அதனால், தனது உயிருக்கு பாதுகாப்பு வேண்டி நீதிமன்றத்தை நாட இருப்பதாகவும் சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி கூறியிருக்கிறார்.

ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை பாரதிய ஜனதா ஆட்சியின்போது மூன்று அமைச்சர்கள் சட்டசபைக்குள் ஆபாச வீடியோக்களை பார்த்த விவகாரம் பூதாகரமாகி அவர்களும் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தற்போது நீர்ப்பாசனத்துறை அமைச்சரான ராஜேஷ் ஜார்கிகோளி ஆபாச வீடியோவால் சிக்கி தன் பதவியை இழந்திருப்பது மட்டுமல்லாமல், வேறு ஒரு அமைச்சருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பது கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து புகார்; வெடிக்கும் சர்ச்சை