ஆன்லைன் கடன் விவகாரத்தில் சீனாவை சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு உண்டு; ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் எச்சரித்து உள்ளார்.

ஆன்லைன் கடன் மோசடி குறித்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், “ஆன்லைன் கடன் விவகாரத்தில் சீனாவை சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு உண்டு. ஆன்லைன் கடன் கொடுத்து டார்ச்சர் தந்த சீனாவைச் சேர்ந்த 2 பேர் உட்பட 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், லேப்டாப், செல்போன், இரண்டு வங்கிகணக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடன் வழங்க பணம் எங்கு இருந்து வருகிறது. எங்கெங்கு வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகள்.

சமூக வலைதளங்களில் வரும் கடன் செயலிகளை பயன்படுத்தி கடன் பெறுவது கூடாது. எதிர்பாராத விதமாக சமூக வலைதளங்களில் வரும் ஆப்ஷனை கிளிக் செய்துவிட்டால் மொபைல் போனில் இருக்கும் அனைத்து டேட்டாக்களையும் பதிவு செய்து கொள்வார்கள்.

கடன் வாங்கியவர்களில் யாரேனும் கடன் தொகையை கட்டமுடியவில்லை என்றால் அவர்களின் செல்போனில் இருந்து எடுத்த அனைத்து நபர்களுக்கும் இவரை பற்றி தவறாக மெசேஜ் அனுப்புவது, போன் கால் செய்வது போன்று தொந்தரவு செய்வார்கள். அதனால் ஆன்லைன் கடன் செயலிகளை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

ஆன்லைன் செயலி மூலம் கடன் வழங்கி மோசடி; எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி