ஆண்களின் துணையில்லாமல் பெண்கள் நீண்ட துார பயணம் மேற்கொள்ள கூடாது; ஹிஜாப் அணியாத பெண்களை ஓட்டுநர்கள் வாகனங்களில் அனுமதிக்கக்கூடாது என்று தலிபான்கள் புதிய தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும், ஆப்கனில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர். இதுவரை தாலிபான் தலைமையை உலகின் பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்கவில்லை. தலிபான்கள் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே முடிவு எடுக்கப்படும் என சில நாடுகள் அறிவித்துள்ளன.

கடந்த 1996-2001 வரையிலான தலிபான்களில் முதல் ஆட்சியில் மனித உரிமைக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் அங்கு இருந்தன. குறிப்பாகப் பெண்களின் உரிமைகளை ஒடுக்கும் வகையில் பல சட்டங்கள் இருந்தன. பெண்கள் கல்வி கற்கக் கூட அங்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதே நிலை மீண்டும் ஏற்படுமோ என அஞ்சப்பட்டது.

இருப்பினும், ஆட்சி அமைத்த போது இதுபோன்ற சட்டங்களைக் கொண்டு வர மாட்டோம் என்றும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு ஆட்சியாகத் தாலிபன்கள் ஆட்சி இருக்கும் என்றும் அந்த அமைப்பின் தலைவர்கள் தெரிவித்தனர்.

ஆனால், தலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு ஆண் மற்றும் பெண்கள் இருபாலும் சேர்ந்து படிக்கும் கல்வி முறைக்குத் தடை விதிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளில் மேல்நிலைப் படிப்புகளில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என தலிபான்கள் அறிவித்தது உலகம் முழுவதும் பெண்ணிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தற்போது ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் பயணிக்க கூடாது என்று அடுத்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது தாலிபான் அமைப்பு. இது தொடர்பாக ஆப்கான் நாட்டின் நல்லொழுக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் தீமைகளைத் தடுப்பதற்கான அமைச்சகம் அனைத்து வாகன உரிமையாளர்களுக்கும் உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், “45 மைல்களுக்கு (72 கிலோமீட்டர்) அதிகமாகப் பயணம் செய்யும் பெண்களுடன் அவர்களின் ஆண் உறவினர்கள் இல்லை என்றால் ஏற்றக் கூடாது. அப்படி ஆண் உறவினர்களுடன் செல்லும் போது பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டிவி நாடகங்களில் பெண் நடிகர்கள் நடிப்பதை நிறுத்துமாறு ஆப்கானிஸ்தானின் தொலைக்காட்சி சேனல்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதேபோல பெண் ஊடகவியலாளர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும்போது ஹிஜாப் அணிய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

மேலும் தற்போதைய நிலையில் தேர்தல் ஆணையத்திற்கு ந்த தேவையும் இல்லை எனக் கூறி, ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையத்தைக் கலைப்பதாக சமீபத்தில் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

இதுபோன்று தொடர்ந்து ஆப்கானிஸ்தானை பின்னோக்கி இழுத்துச் செல்லும் நடவடிக்கைகளை தலிபான்கள் மேற்கொண்டு வருவதற்கு சமூக செயற்பாட்டாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.