நாமக்கல் கோவில் ஆஞ்சிநேயர் சிலைக்கு பூஜை செய்யும் போது எட்டடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து அர்ச்சகர் வெங்கடேசன் என்பவர் உயிர் இழக்கிறார்.
 
உடனே முதல்வர் அவர் குடும்பத்துக்கு 5 லட்சம் நிதி உதவி கொடுக்கிறார்.ஊடகங்கள் எல்லாம் அதை மிகப்பெரிய செய்தியாக்கி பரப்பரப்பாக்குகின்றன.மக்கள் அர்ச்சகருக்கு நிதி கொடுக்கிறார்கள்.ஒரே நாளில் 15 லட்சம் நிதி குவிந்ததாக விகடன் செய்தி வெளியிடுகிறது.
 
இன்றைய செய்தியில் அந்த அனுமர் சிலையில் வருங்கால அர்ச்சகர்கள் பாதுகாப்பாய் பூஜை செய்ய ப்ளாட்பார்மும் அதற்கு பாதுகாப்பு கைப்பிடியும் வைக்கப்பட்டதாக படித்தேன்.
 
ஆஞ்சிநேயர் – துளசி மாலை – அர்ச்சகர் – மரணம் என்ற உடன் எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள் பாருங்கள்.
1. அந்த செய்தி மக்கள் மனதில் படிகிறது.
2. அந்த செய்தி மக்களை வருத்தப்பட வைக்கிறது.
3. அந்த செய்தியை ஒட்டி மக்கள் நிதி அனுப்புகிறார்கள்.
4. அரசாங்கம் நிதி கொடுக்கிறது.
5. அரசு இயந்திரம் வேகமாக இயங்கி அதை சரி செய்து கொடுக்கிறது.
 
ஒரே ஒரு அர்ச்சகரின் உயிருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.கொடுக்கட்டும். அது மனித நேய செயல்தான். உயிரைப் பொறுத்தவரை ஒரு உயிரும் ஒராயிரம் உயிரும் ஒன்றுதான். அவருக்கு செய்தது பற்றி குறை சொல்லவில்லை.
 
 
ஆனால் நாட்டில் வருடத்துக்கு சராசரியாக 1300 இந்தியர்கள் மலக்குழியில் இறங்கி பாதாள சாக்கடையில் இறங்கி விஷக்காற்று பட்டு இறந்து போகிறார்கள்.
 
அவர்களுக்கு உடனே அரசாங்கம் குறைந்தபட்சம் பத்து லட்சமாவது பணம் கொடுக்க வேண்டும். ஆனால் கொடுக்காது.
மக்களாகிய நாம் பாதாள சாக்கடை சுத்தம் செய்பவர்களின் மரணத்தை கண்டுகொள்ள மாட்டோம்.
 
1. அந்த செய்தி மக்கள் மனதில் படியாது 
2. அந்த செய்தி மக்களை வருத்தப்பட வைக்காது.
3. அந்த செய்தியை ஒட்டி மக்கள் ஒரு பைசா நிதி அனுப்பமாட்டார்கள். 
4. அரசாங்கம் நிதி கொடுக்காது.
5. அரசு இயந்திரம் வேகமாக இயங்கி வருங்காலத்தில் அது நடக்காதது மாதிரி எதுவும் செய்து கொடுக்காது.
 
இத்தனைக்கும் பாதாள சாக்கடை அடைப்பு எடுப்பது என்பது சமூகத்துக்கு மிக மிக அவசியமான சேவையாகும். சட்டப்படி அதை செய்ய கூடாது. அதை செய்ய வைக்க கூடாது. ஆனாலும் வேறு வழியில்லை என்று நாம் அனைவரும் அந்த விதியை தளர்த்தி ஊரில் யார் இளிச்சவாய் மனிதனோ அவரை இறக்குகிறோம்.
 
எவ்வளவு பக்காவாக க்ரைம் செய்கிறோம் பாருங்கள். இதில் ஒன்று கூட நம் மனதை உறுத்தாது.
 
ஆனால் அர்ச்சகர் ஆஞ்சிநேயருக்கு துளசி மாலை போடும் போது கீழே விழுந்து இறந்தால் முதல்வரில் இருந்து மொத்த சமூகமும் இரங்கும், கொதிக்கும், அவருக்கான நட்ட ஈடை நிதியாக வசூலித்துக் கொடுக்கும்.
 
ஒரு மனிதனுடைய உயிரும் இன்னொரு மனிதனுடைய உயிரும் ஒன்றில்லை என்றாகிவிடுவது பற்றி நமக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை.
 
அன்றாட வாழ்க்கையில் நீங்களும் நானும் எவ்வளவு பெரிய குற்றங்களை சுரணையே இல்லாமல் செய்து கொண்டிருக்கிறோம் கவனியுங்கள்.
 
அந்த சுரணையற்றதன்மையின் பின்னால் இருக்கும் உளவியலை தைரியமாக உற்று கவனியுங்கள்…சமயம் கிடைக்கும் போதெல்லாம் கவனியுங்கள்.
 
இந்திய சாதி சமூக அமைப்பை நன்றாக புரிந்து கொள்ளலாம்….
கட்டுரையை எழுதியவர் : விஜய்  பாஸ்கர் விஜய்