நார்தன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நடிகர் சிம்பு தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள ‘மாநாடு’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், சிம்புவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கன்னடத்தில் ‘மஃப்டி’ என்ற வெற்றிப் படத்தை இயக்கிய நார்தன் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். சிம்புவின் 45-வது படமாக உருவாகும் இதில் கவுதம் கார்த்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அதிக பெருட்செலவில் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மதன் கார்க்கி இந்த படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை எழுதுகிறார். இந்த படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடித்துள்ள “தேவராட்டம்” படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.