8 வழிச்சாலை, வேளாண் சட்டம், சிஏஏ, மீத்தேன், நியூட்ரினோ உள்ளிட்ட மக்கள் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டத்தின் முதல் நாளில் ஆளுநர் உரையாற்றினார். பின்னர் அலுவல் ஆய்வுக் குழுவில் ஜூன் 24 வரை கூட்டத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை உறுப்பினர்கள் உரையாற்றினர்.

இறுதியாக இன்று (24-06-2021) பேரவை தொடங்கியதும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உறுப்பினர்கள் வைத்த வாதம், எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசினார்.

அப்போது, “நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற 100வது ஆண்டில் திமுக ஆட்சி அமைந்ததை பெருமையாகக் கருதுகிறேன். நீதிக்கட்சியின் தொடர்ச்சி அண்ணா. அண்ணாவின் தொடர்ச்சி கருணாநிதி, கருணாநிதியின் தொடர்ச்சி நான், இந்த அரசு. இந்த அரசின் கொள்கைகளைத் தமிழகம் எட்டவேண்டிய இலக்கு, இந்த அரசின் தொலை நோக்கைத் தான் ஆளுநர் உரையில் சுட்டிக்காட்டப்பட்டது.

நீதிக்கட்சியின் முதலாவது பிரதம அமைச்சர் கடலூர் ஏ.சுப்பராயலு ரெட்டியார், காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த காமராஜர், திமுகவைத் தோற்றுவித்து முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணா, இந்தத் தமிழகத்தை 19 ஆண்டுகள் ஆட்சி செய்த கருணாநிதி மற்றும் முதல்வராக இருந்த தகுதிமிக்க ஏனைய சான்றோர்களையும் நினைவுகூர்வது எனது கடமையாகும், நமது முன்னோர்களை நினைவுகூர்வது என்பது தமிழர் பண்பாடு ஆகும்.

இந்தக் கூட்டத்தொடரில் திமுக, அதிமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் 22 உறுப்பினர்கள் கருத்துகளை எடுத்து வைத்துள்ளார்கள். அவர்கள் வாதத்தை நான் ஆலோசனைகளாக எடுத்துக்கொள்கிறேன். ஏனென்றால் நான் அண்ணாவின் அரசியல் வாரிசு. கருணாநிதியின் கொள்கை வாரிசு.

ஐந்தாண்டு ஆட்சி செய்யும் அரசு, கொள்கை திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது. ஆளுநர் உரை முன்னோட்டம் தான். அதாவது ஆளுநர் உரை ட்ரெய்லர் தான். முழு நீளத் திரைப்படத்தைத் திரையில் காண்பர் என்பது போல, மேற்கொண்டு வரும் பயணத்தில் சந்திக்கும் சவால்கள் அனைத்தும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படும்.

மேலும் கடந்த காலங்களில் மக்கள் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் திருத்தச் சட்டங்கள், இந்தியக் குடியுரிமைச் சட்டம், 8 வழிச்சாலை, மீத்தேன், நியூட்ரினோ கூடங்குளம் திட்டத்துக்கு எதிராக அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும். மேலும் கடந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை சேலத்தில் விவசாயிகள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஒன்றிய அரசு’ என்று தான் பயன்படுத்துவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்