அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.37 கோடி மோசடி செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணியை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளராக இருப்பவர் மணி. இவர் கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

குறிப்பாக கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக 17 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டார். ஆனால் தனக்கு வேலை வாங்கித் தரவில்லை. பணத்தை திரும்ப கேட்டால் பணத்தையும் கொடுக்கவில்லை என தமிழ்ச்செல்வன் சேலம் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் புகார்கள் தொடர்ச்சியாக குவியத் தொடங்கியதை அடுத்து, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி உட்பட இருவர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் தனி உதவியாளர் மணி உட்பட இருவரும் தலைமறைவானதை அடுத்து, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் இளமுருகன் தலைமையில் மணியை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

இதற்கிடையே மணி முன் ஜாமின் கேட்டு கடந்த 1 ஆம் தேதி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குமரகுரு, முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணியை சேலம் குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று (28.11.2021) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வேலை வாங்கித் தருவதாக நடந்த பண மோசடி அப்போதைய முதலமைச்சருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.