அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது, தனியார் பள்ளிகள் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தி கொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்க தாமதமாவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பாடங்கள் கற்பிப்பது மிக தாமதமாகவே ஆன்லைனில் தொடங்கியது.

பெரும்பாலானோர் ஏழை மாணவர்கள் என்பதால், ஸ்மார்ட்போன் இல்லாத நிலையில் அவர்கள் பாடங்களை தொலைக்காட்சி சேனல்கள் வாயிலாக மட்டுமே கற்கும் நிலையில் உள்ளார்கள். ஆன்லைனில் கற்பது ஏழை மாணவர்களுக்கு சாத்தியம் இல்லாத ஒன்றாக உள்ளது.

இந்த சூழலில் தேர்வுகளை நடந்துவது என்றாலும் ஆன்லைனில் நடத்துவதும் சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம். மேலும் பாடத்திட்டங்கள் 9 ஆம் வகுப்பு வரை 50%, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு 35% குறைக்கப்பட்டுள்ளன” என அறிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களை எதிரிகளாக பார்க்க வேண்டாம்- உயர்நீதிமன்றம்