அரசு பள்ளி மாணவர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளாக பார்க்க வேண்டுமே தவிர எதிரியாக பார்க்க கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், 7.5% இட ஒதுக்கீடு வழக்கில் இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டனர்.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதன் முலம் இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் 405 அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்த பூஜா என்ற மாணவி இந்தாண்டு 3 ஆவது முயற்சியாக எழுதிய நீட் தேர்வில் 565 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

நீட் தேர்வில் 565 மதிப்பெண்கள் பெற்றிருந்தும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், 7.5% இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து பூஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் எம்.எஸ் ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு கொண்டு 7.5% இட ஒதுக்கீடு காரணமாகவே அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் தனக்கு மருத்துவ இடம் கிடைக்காமல் போனதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், நீட் தேர்வில் 200 மதிப்பெண்கள் கூட தாண்டாத அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது நியாமற்றது. எனவே தமிழக அரசு கொண்டு வந்த 7.5 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

மேலும் இந்த வழக்கு முடியும் வரை 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடங்களை இறுதி செய்ய கூடாது எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது .

அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டதால் தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டனர்.

அரசு பள்ளிகளின் தரம் குறைவாக இருப்பதால் தான் மாணவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்கள்.

மேலும், அரசு பள்ளி மாணவர்களை தங்கள் வீட்டு பிள்ளைகளாக பார்க்க வேண்டுமே தவிர எதிரியாக பார்க்க கூடாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஏழை மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்க்கை கிடைப்பதை உறுதி செய்யவே இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், 7.5% இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்கையும் விசாரிக்கப்படும் என க் கூறி விசாரணையை ஜனவரி 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

சென்னை ஐஐடியில் எகிறும் கொரோனா; 183 பேர் பாதிப்பு