அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள் என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

அரசு ஊழியர் என்பதை மறைத்து இலவச வீட்டு மனைப்பட்டா பெற்றது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (நவம்பர் 30) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசு ஊழியர் என்பதை மறைத்து இலவச வீட்டு மனைப்பட்டா பெற்ற அரசு ஊழியர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினர்.

அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை கேட்ட நீதிபதிகள், அவர் மீது புகார் அளிக்கப்பட்டு ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஊழல் செய்து சேர்த்த சொத்துகளுடன், அவர்களது மொத்த சொத்துகளையும் சேர்த்து பறிமுதல் செய்ய வேண்டும். மக்களுக்கு இடையூறு செய்வது அரசியல்வாதிகளாகவோ, அரசு ஊழியர்களாகவோ யாராக இருந்தாலும் அவர்கள் சமூகத்துக்கு எதிரானவர்களே.

அரசு ஊழியர்களுக்கு ஏன் சங்கங்கள்? அவற்றை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் முறையாக தங்கள் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

பொதிகை மூலம் சமஸ்கிருதம் திணிப்பு… வலுக்கும் எதிர்ப்புகள்