மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டப் பேரவையில் செப்டம்பா் 15-இல் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாட்களாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கவில்லை. இதற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து முடிவெடுக்க தனக்கு 3 முதல் 4 வார கால அவகாசம் தேவை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அடிப்படையாகக் கொண்டு, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

முன்னதாக மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்பது எங்களுக்கு தெரியும், ஆனால் ஆளுநர் மனசாட்சிப்படி முடிவெடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேஇஇ நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்டம்; 99.8% மதிப்பெண்கள் பெற்றவர் உட்பட 5 பேர் கைது