2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ள உள்ள போட்டித் தேர்வுகள், தேர்வு விதிமுறைகள் மற்றும் பணி நியமனங்கள் குறித்த திட்ட அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.

அரசு சார்ந்த ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவரும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதில் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுகின்றனர். இந்த வகையில் ஆண்டு தோறும் பல தேர்வுகள் நடத்தப்படுகிறன்றன. கல்லூரி மாணவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் என பலரும் இந்த தேர்வை எழுதி வருகின்றனர்.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டுக்கான அரசு பணி நியமனங்கள், போட்டித் தேர்வு மற்றும் தேர்வு விதிமுறைகள் குறித்து திட்ட அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் நேற்று (7.12.2021) வெளியிட்டார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், “டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குருப் 2 தேர்வும், மார்ச் மாதம் குருப் 4 தேர்வும் நடைபெறும். தேர்வு அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும்.

விஏஓ மற்றும் குருப் 4 தேர்வுகளில் தமிழ் தாளில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். கூடுதல் மதிப்பெண் பெற்றால் அதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

கொரோனா நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குரூப் 2, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ போன்ற தேர்வுகள் நடத்தப்படவில்லை. இதனால் அடுத்த ஆண்டில் 32 தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

இதில் குரூப் 2 பிரிவில், 5831 பணியிடங்களும், குரூப் 4 பிரிவில் 5258 பணியிடங்களும் காலியாக உள்ளது. தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு இந்த காலி பணியிடங்கள் மாற்றி அமைக்கப்படவும் வாய்ப்புள்ளது.

மேலும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை.

தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்களுடன் புறப்படும் வாகனங்கள் ஜிபிஎஸ் கருவி மூலம் கண்கானிக்கப்படும். ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின் விவரங்களை கொண்டே விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு வரும் வழியில் முறைகேடு செய்யப்பட்டது.

இதனால் முறைகேட்டை தடுக்க இனி ஒஎம்ஆர் விடைத்தாளில் இருந்து தேர்வரின் விபங்கள் தனியாக பிரிக்கப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

https://www.tnpsc.gov.in/static_pdf/annualplanner/2022_ARP_Planner_07_12_2021.pdf