சுதா கொங்குரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் இணையதளத்தில் வெளியாகும் என்று படத்தின் நடிகரும், தயாரிப்பாளருமான சூர்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், “இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது.. என்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் வார்த்தைகள் நம்பிக்கையின் ஊற்று. கண்ணுக்கு தெரியாத வைரஸ், ஒட்டு மொத்த மனித குலத்தின் செயல்பாட்டையும் நிறுத்தி, வைத்திருக்கும் சூழலில், பிரச்சனைகளில் மூழ்கி விடமால், நம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போடுவதே முக்கியம்.

இயக்குனர் சுதா கொங்குரா அவர்களின் பல ஆண்டுகால உழைப்பில் உருவாகியுள்ள, ‘சூரரைப் போற்று’ திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிகசிறந்த படமாக நிச்சயம் இருக்கும். பல்துறை கலைஞர்களின் கற்பனை திறனிலும், கடுமையான உழைப்பிலும் உருவாகும் திரைப்படத்தை சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் கடமை.

எனது 2டி எண்டர்டெயின்மெண்ட், நிறுவனம் இதுவரை எட்டு படங்களை தயாரித்து வெளியீடு செய்திருக்கிறது. மேலும் பத்து படங்கள் தயாரிப்பில் உள்ளன. என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில், நடிகராக இல்லாமல், தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன்.

சூரரைப் போற்று திரைப்படத்தை, அமேசான் ப்ரைம் வீடியோ’ மூலம் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த இந்த முடிவை, திரையுலகை சார்ந்தவர்களும், என் திரைப்படங்களை திரையரங்கில் காண விரும்புகிற பொதுமக்களும், நற்பணி இயக்கத்தை சேர்ந்த தம்பி, தங்கைகள், உள்ளிட்ட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென அன்புடன் கெடுக்க கொள்கிறேன்.

இருப்பதை அனைவருடன் பகிர்ந்த வாழ்வதே சிறந்த வாழ்வு. இந்த எண்ணத்தை இன்றளவும் செயல்படுத்தியும் வருகிறேன். சூரரைப் போற்று திரைப்படம் வெளியியிட்டு தொகையில் இருந்து தேவை உள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க முடிவு செய்திருக்கிறேன்.

பொதுமக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் கொரோனா யுத்த காலத்தில்’ முன்நின்று பணியாற்றியவர்களுக்கும், இந்த 5 கோடி ருபாய் பகிர்ந்தளிக்கப்படும், உரியவர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும், வாழ்த்தும் தொடர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடி சூழலை மனவுறுத்தியுடன் எதிர்த்து மீண்டும் எழுவோம் நன்றி” என சூர்யா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: எக்மோ சிகிச்சையில் எஸ்பிபி… உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்