அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி நடத்திய வன்முறை, துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று ஜோபிடன் வென்றார். ஆனால் இந்த வெற்றியை ட்ரம்ப் ஏற்க மறுத்து, ஜோபிடன் தேர்தலில் முறைகேடு செய்து வென்றதாக குற்றச்சாட்டு எழுப்பினார்.

இந்நிலையில் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க நாடாளுமன்றம் கூடியது. இதற்கான இரு அவையின் கூட்டுக் கூட்டத்தில், தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில், ஜோ பைடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

நாடாளுமன்றம், அதிபர் மாளிகையிலிருந்து சுமார் 2 மைல் தொலைவில் அமைந்துள்ளது. அப்போது அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள், அமெரிக்கா.. அமெரிக்கா என முழக்கமிட்டபடி, அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்புகளை கீழே தள்ளிவிட்டும் உடைத்துக் கொண்டும் நாடாளுமன்றத்துக்குள் புகுந்தனர்.

ஜோ பைடனை அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு எதிராக குரல் எழுப்பினர். அப்போது அவர்களுக்கும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் ஜோ பைடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டு, துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் இதர உறுப்பினர்களும் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இ்தில் ஒரு பெண் மீது குண்டு பாய்ந்தது. படுகாயமடைந்த அப்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே நடந்த தள்ளுமுள்ளுவில் 3 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர். அந்த மோதலில் காவல்துறையினர் பலரும் காயமடைந்தனர்.

அதன்பின்னர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் நுழைவுவாயில்கள் அனைத்தும் மூடப்பட்டு, பூட்டப்பட்டது. நாடாளுமன்றத்தை ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து தலைநகர் வாஷிங்டனில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜனவரி 13 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி- மத்திய அரசு