அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தொலைபேசி உரையாடல் பதிவு ஒன்றை அவரது முன்னாள் உதவியாளர் ஒமரோசா மனிகால்ட் நியூமேன் என்ற பெண் ரகசியமாக பதிவு செய்து வெளியிட்டு உள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடல், அமெரிக்காவில் என்.பி.சி. தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த உரையாடல் பதிவு, அவரும் ஜனாதிபதி டிரம்பும் உரையாடுவதாக அமைந்து உள்ளது.அந்த உரையாடலில் ஜனாதிபதி டிரம்பின் குரல் என்று நம்பப்படுகிற ஒரு குரல் ஆச்சரியத்துடன், “நீங்கள் பணியில் இருந்து விலகுவதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று கேட்கிறது.

அதற்கு ஒமரோசா, “ ஜெனரல் கெல்லி என்னிடம் வந்து, நீங்கள் அனைவரும் நான் பணியில் இருந்து விலக வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்” என்று பதில் அளித்து உள்ளார்.

உடனே டிரம்பின் குரல் என நம்பப்படுகிற அந்தக் குரல், “இல்லை… என்னிடம் யாரும் இதைப்பற்றி சொல்லவில்லை. எனக்கு தெரியாது. நீங்கள் பணியில் இருந்து செல்வதை நான் விரும்பவில்லை” என்று கூறுகிறது. இப்படியாக அந்த உரையாடல் நீளுகிறது.

இது குறித்து டிரம்ப் நேற்று முன்தினம் டுவிட்டரில் கருத்து தெரிவிக்கையில், “ அந்தப் பெண், பணியை இழந்த பின்னர் என்னைத் தாக்கத் தொடங்கி உள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வெள்ளை மாளிகை ஊழியர்களின் தலைவரை கேட்டு உள்ளேன்” என்று கூறி உள்ளார்.

டிரம்பின் வக்கீல் ரூடி கிலானி கருத்து தெரிவிக்கையில், “வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தனிப்பட்ட உரையாடலை பதிவு செய்ததின் மூலம் அவர் சட்டத்தை மீறி விட்டார்” என கூறி உள்ளார்.