அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப் போட்டு வரும் இடா சூறாவளி, தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் கன மழைக்கு இதுவரை 2 வயது சிறுவன் உட்பட 42 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தெற்கு மாகாணமான லூயிசியானாவில் இடா சூறாவளி காரணமாக பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் ஓடுகிறது.

அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய ஐந்தாவது சக்தி வாய்ந்த சூறாவளியாக இடா கருதப்படுகிறது. சூறாவளி பாதிப்பு காரணமாக கடலோர மாவட்டங்கள், ஜீன் லேஃபிட், லெயர் லேஃபிட் உள்ளிட்ட சிறிய நகரங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

லூயிசியானா, மிஸ்ஸிசிப்பியில் இடா சூறாவளி ஏற்படுத்திய தாக்கத்தின் தீவிரத்தை செயற்கைக்கோள் படங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. நியூயார்க் நகரில் சுரங்கப்பாதைக்குள் கனமழை கொட்டும் காட்சியும், அதற்கு மத்தியிலும் இயக்கப்பட்ட கடைசி ரயில் சேவை வந்து போகும் காணொளியை உள்ளூர் மக்கள் பகிர்ந்துள்ளனர்.

[su_image_carousel source=”media: 26164,26165″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

இந்நிலையில், நியூயார்க் நகரின் ப்ரூக்ளின் மற்றும் குயின்ஸ் பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சுரங்கப் பகுதிகளிலும், வெளியிடங்களிலும் மக்கள் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணிகளை உள்ளூர் நிர்வாகங்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

தற்போது நியூயார்க் நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நகர மேயர் பில் டி பிளாசியோ, வரலாறு காணாத வானிலையை நியூயார்க் அனுபவித்து வருகிறது. நகர சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதேபோல் நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம் காரணமாக நியூயார்க் நகர சுரங்க ரயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. நியூயார்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

[su_image_carousel source=”media: 26167,26166″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

இடா சூறாவளி பாதிப்பு குறித்து தெரிவித்துள்ள நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ, “ஒருவேளை பொதுமக்கள் வெளியே சென்றிருந்தால், சுரங்க பாதைகள், சாலைகளில் செல்வதை தவிருங்கள். வெள்ளம் ஓடும் சாலைகளில் பயணம் செய்யாதீர்கள்” என்று வலியுறுத்தி உள்ளார்.

மேலும் நியூயார்க், நியூ ஜெர்சி, கனெக்டிகட் ஆகியவற்றின் குடியிருப்புகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அசம்பாவிதத்தை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகங்கள் தெரிவித்துள்ளனர்.

இடா சூறாவளி நியூயார்க், நியூ ஜெர்சியை தாக்கும் முன், நியூ ஓர்லியான்ஸ் பகுதியில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. நியூ ஓர்லியான்ஸ் பகுதியில் இதுபோன்ற வேகத்தில் சூறாவளி வருவது கடந்த 16 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. இதற்கு முன்பு 2005 ஆம் ஆண்டு வீசிய கேத்ரினா சூறாவளியின்போது அங்கு 1,800 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியேறிய அமெரிக்க ராணுவம்; ஆப்கானுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக தலிபான்கள் அறிவிப்பு