நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியைத் தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, “நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல.

இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும். ஆட்சியை நடத்த இந்திதான் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இது மொழியின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கும்.

அமைச்சரவையின் 70% நிகழ்ச்சி நிரல்கள் இனி இந்தியில் தான் தயாராகும். வடகிழக்கின் 8 மாநிலங்களிலும் 10 ஆம் வகுப்பு வரை இந்தி வரும் நாட்களில் கட்டாயமாக்கப்படும். மாணவர்கள் இந்தி மொழித் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன. அமித் ஷாவின் பேச்சைத் தொடர்ந்து #stopHindiImposition என்று பலரும் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்!

இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. ‘இந்தி மாநிலம்’ போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித்ஷா நினைக்கிறாரா?

ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது!

ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், “இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது; அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.