ஒன்றிய பாஜக அமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பு பேச்சிற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சி அமைத்தது முதல் இந்தி மொழியை அனைத்து மாநிலங்களிலும் திணித்துவிட வேண்டும் என தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால், இந்த திணிப்பு முயற்சியை தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியை ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு அல்ல” எனத் தெரிவித்தார்.

அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. #இந்திதெரியாதுபோடா, #StopHindiImposition ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சமூகவலைதள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ழகரம் ஏந்திய தமிழணங்கு என்ற வார்த்தைகள் தாங்கிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்ற கவிதையில் வரும் ‘இன்பத் தமிழ் உங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வார்த்தைகளும் அந்த இடம் பெற்றுள்ளது. ஒன்றிய அமைச்சரின் இந்தி தணிப்பு பேச்சை அடுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த பதிவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கவிப்பேரரசு வைரமுத்துவும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள கவிதையில்,

வடக்கே வாழப்போன தமிழர்

இந்தி கற்கலாம்

தெற்கே வாழவரும் வடவர்

தமிழ் கற்கலாம்

மொழி என்பது

தேவை சார்ந்ததே தவிர

திணிப்பு சார்ந்ததல்ல

வடமொழி ஆதிக்கத்தால்

நாங்கள் இழந்த நிலவியலும் வாழ்வியலும் அதிகம்

இதற்குமேலும் இந்தியா?

தாங்குமா இந்தியா? எனத் தெரிவித்துள்ளார்.