தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ஆடை படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல இருக்கும் அமலா பால், இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு, விவாகரத்து பெற்று, மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அமலாபால் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த ராட்சசன் படம் நல்ல வசூல் ஈட்டியது.

இதையடுத்து, அந்தோ அந்த பறவை போல, ஆடை ஆகிய தமிழ் படங்களிலும், 3 மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.

ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் படுகவர்ச்சியான தோற்றத்தில் அமலா பால் காட்சி அளிக்கிறார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்தி மொழிப் படங்களில் தான் அதிக கவர்ச்சி காட்டுவார்கள் என்ற பார்வை இருக்கிறது. ஆனால் அதையும் மிஞ்சும் வண்ணம், அமலா பால் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அமலா பால் கூறுகையில், ஆடை படத்தின் கதை மிகவும் வித்தியாசமானது. உணர்வுப்பூர்வமானது. எனது கதாபாத்திரம் மிகவும் வலிமை வாய்ந்தது. அதனால் தான் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

தற்போது ஆடை படப்பிடிப்பு நிறைவடைந்து தொழில் நுட்ப பணிகளும் முடிந்த நிலையில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். யு/யுஏ சான்றிதழை படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் அதிக ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபித்தனர். யு அல்லது யுஏ சான்றிதழ் அளிக்கவும் மறுத்து விட்டனர். அதற்கு பதிலாக ஏ சான்றிதழை அளித்துள்ளனர்.