வேட்புமனு தாக்கலின் போது பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்த புகாரில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 2009 ஆம் ஆண்டு தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர்,

அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக நெறிகளுக்கு மாறாக தங்களது வேட்புமனுவுடன் கூடிய பிரமாண பத்திரத்தில் சொத்துக்கள், வருவாய், கல்வித்தகுதி ஆகியவை குறித்து தவறான தகவல் அளித்து தேர்தலில் வெற்றி பெற்றதாகவும், எனவே அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,

தேனி மாவட்ட முன்னாள் திமுக இளைஞரணி செயலாளரான மிலானி என்பவர் தேனி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி தனித்தனியாக இரண்டு மனுத் தாக்கல் செய்தார்.

மேலும் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் ஆகியோர் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் என்பதால் பொதுநல நோக்குடன் வழக்கு தொடர்ந்துள்ள தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் முன்னிலையில் ஜனவரி 6, 7 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.‌ விசாரணையில், மனுதாரரின் புகார் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை அறிக்கையை வருகின்ற பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

மேலும் புகாரில் தெரிவிக்கப்பட்ட இருவரையும் வாரண்ட் இன்றி கைது செய்யக்கூடாது எனவும், மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக ஒருங்கிணைப்பாளரும் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் ஆகிய இருவர் மீது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.