அமெரிக்காவின் சி.டி.எஸ் நிறுவனத்திடம் கட்டிட அனுமதி, மின் இணைப்பு, சுற்றுச் சூழல் அனுமதி பெற ரூ26 கோடி லஞ்சம் பெற்ற ஜெயலலிதா அரசின் அதிமுக அமைச்சர்கள், அதிகாரிகள் மீது சி.பி.ஐ., இன்டர்போல் மூலம் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
இது குறித்து திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறிய விவரம் பின்வருமாறு:
 
சென்னையில் உள்ள காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ்( சிடிஎஸ் ) எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் கேஐடிஎஸ் கேம்பஸ் கட்டிடம் கட்டுவதற்கும், சிறுசேரியில் கட்டிட அனுமதி, மின்சார இணைப்பு வழங்குதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறவும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு ரூ26 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கு, அதிமுக ஆட்சி யில் ஜெயலலிதா அரசின் தமிழகத்திற்கு உலக அரங்கில் அழிக்க முடியாத பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது .
 
26 கோடி ஊழல் ஆதாரங்களின் அடிப்படையில் சி.டி.எஸ் நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் வழக்கு தொடரப்பட்டு அந்த அதிகாரிகள் மீது கூட்டுச்சதி, ஊழல், மற்றும் பொய்யான ஆதாரங்களைத் தயாரித்தது போன்ற மிகக் கடுமையானதும் மோசமானதுமான குற்றச்சாட்டுக்கள் அமெரிக்க நீதிமன்றத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ளன.
 
இந்த வழக்கு விசாரணையில், தமிழக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை அந்த தனியார் நிறுவனம் ஒப்புக்கொண்டு விட்டது.
 
அதனடிப்படையில் சி.டி.எஸ் நிறுவனத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 
வெளிநாடுகளில் ஊழல் செய்வதைத் தடுக்கும் அமெரிக்க சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட இந்த வழக்கு, அதிமுக ஊழல் ஆட்சியின் முகத்தை தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, தமிழ் நாட்டிலிருந்து சென்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியிலும் வெளிப்படுத்தியிருக்கிறது.சதுர அடிக்கு இவ்வளவு என ரேட் நிர்ணயித்து கட்டிட அனுமதி வழங்குவதற்கு அதிமுக ஆட்சி நடத்தும் கொள்ளை சென்னையிலும், தமிழகத்திலும்,
இந்தியாவிலும் ஏற்கனவே தெரிந்திருந்த நிலையில், இப்போது இறக்கை கட்டிப் பறந்து சென்று அமெரிக்காவிலும் ஆதாரபூர்வமான ஊழல் வழக்கு மூலம் தெரிய வந்திருப்பது கேடுகெட்ட இந்த அ.தி.மு.க ஆட்சியால், இங்குள்ள தமிழர்களுக்கும், அமெரிக்காவில் உள்ள தமிழர் களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டது.
 
அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் இந்த ஊழல் நடைபெற்றதாக கருத முடியாது. ஏனென்றால், அதிகாரிகளை பணம் வசூலிக்கச் சொல்லி உத்தரவிடுவது அதிமுக அமைச்சர்கள் தான் என்பது நாடறிந்த உண்மை.
 
ஆகவே, இந்த 26 கோடி ஊழல் விவகாரத்தில் 2012 முதல் 2016 வரையிலான காலகட்டங்களில் பதவியில் இருந்த வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம், மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பி தங்கமணி மற்றும் சுற்றுப்புறச் சூழல் அமைச் சர்களாக இருந்த பி.வி. ரமணா, எம்.சி சம்பத், தோப்பூர் வெங்கடாசலம், கே.சி கருப்பண்ணன் ஆகியோருக்கு இந்த அமெரிக்கன் டாலரில் நடந்த ஊழலில் நிச்சயம் பெரும் பங்கு உண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
 
ஆகவே, தமிழக அரசின் லஞ்ச ஊழல் தடுப்புத் துறை, உடனடியாக ஊழல் வழக்கு பதிவு செய்து, சி.பி.ஐ மற்றும் இன்டர்போல் உதவியை நாடி, அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் தாமதமின்றிப் பெற வேண்டும்.
 
அந்த வழக்கில் தாக்கலாகியுள்ள வீடியோ கான்பரன்ஸ் ஆதாரங்களையும் பெற வேண் டும். ஊழல் ஆதாரங்களின் அடிப்படையில் சென்னை மற்றும் சிறுசேரி ஆகிய இடங்க ளில் சி.டி.எஸ் நிறுவனத்தின் கட்டிட அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் அந்தத் துறை சார்ந்த அமைச்சர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து அனைவருக்கும் சிறைத் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
வெளிநாடுகளுடன் நல்லுறவை வளர்த்து விட்டதாகக் கூறும் மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, 26 கோடி ஊழல் ஆதாரங்களையும், நீதி, நேர்மையைக் காப்பாற்றும் நோக்குடன், அமெரிக்க நீதிமன்றத்தில் இருந்து பெற்று தமிழக லஞ்ச தடுப்பு லஞ்ச ஊழல் தடுப்புத் துறைக்கு வழங்குவதற்கு அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.