சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும் என்று சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதிமுக பொதுச் செயலளாராக இருந்த ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, 29.12.2016 அன்று கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா மற்றும் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான கடிதங்களை தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தனர். தேர்தல் ஆணையமும் அவர்களது தேர்வை ஏற்றுக்கொண்டது.

இதனை எதிர்த்து சசிகலா, தினகரன் இருவரும் 1.11.2017 அன்று சென்னை மாவட்ட 4-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், பொதுச் செயலாளர் இல்லாமல் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரியும், அந்தக் கூட்டத்தில் கட்சியிலிருந்து தங்களை நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரியும் வழக்கு தொடர்ந்தனர்.

மேலும் தன்னை பொதுச் செயலாளராக அறிவித்து 2016 டிசம்பர் 29 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரையும் கட்டுப்படுத்தும் எனவும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது சட்டவிரோதம் எனவும் அறிவிக்க வேண்டும் என சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, செம்மலை ஆகிய 3 பேரும் பதில் மனுதாக்கல் செய்தனர். அதில் சசிகலா கட்சியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டு, அதனை உச்ச நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஏற்றுக் கொண்ட நிலையில், தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா தவறான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் அதிமுக இணைந்ததால் தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. எங்களது ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. எனவே சசிகலா தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இதனிடையே, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை உருவாக்கி நடத்தி வருவதால், இந்த வழக்கிலிருந்து விலகி கொள்வதாக அதன் பொது செயலாளரான டிடிவி.தினகரன் தரப்பில் மனுத்தாகல் செய்யப்பட்டது.

இதனையடுத்து கட்சியில் பொதுச் செயலாளர் உரிமை கோரும் சசிகலா வழக்கை மட்டும் நீதிமன்றம் விசாரித்த நிலையில், அவரது வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை சென்னை மாவட்ட 4-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஜெ. ஸ்ரீதேவி இன்று (11.4.2022) பிறப்பித்தார். தீர்ப்பில், “வி.கே.சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

சசிகலா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது செல்லும்” என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் சட்ட ரீதியிலான வெற்றி கிடைத்துள்ளது.