பாஜக தலைமையிலான 5 ஆண்டு கால ஆட்சியில் நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் விஸ்வரூபம் எடுத்திருப்பதாக மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.
 
மக்களவையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், நாட்டில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
 
மேலும் மாநிலங்கள் தங்கள் நிதிக்காக பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக கூறிய போது தம்பிதுரை கருத்திற்கு பியூஷ் கோயல் மறுப்பு தெரிவித்தார்
 
ஆனாலும் தொடர்ந்து பேசிய தம்பிதுரை பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையால் தமிழகத்தில் சிறு தொழில்கள் அழிந்து விட்டதாக தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார். பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் என்ன என வினவிய அவர் வேலையில்லா திண்டாட்டம் தான் பெருகியுள்ளது என்றார்.
 
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் 6 சதவீதம் உயர்ந்துள்ளது என்றார்.
 
படிப்பை முடித்த இளைஞர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். கடந்த 2018-2019 பட்ஜெட்டை தாக்கல் செய்த அருண்ஜேட்லி, வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக கூறினார்.
 
அப்போது 7 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறினார். ஆனால் தற்போதைய இடைக்கால பட்ஜெட்டில் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது என்ன எண்ணிக்கை என தெரியவில்லை என்றார் தம்பிதுரை.
 
மேலும் பேசிய அவர் கஜா, ஓகி உட்பட 4 புயல்கள் தமிழகத்தை தாக்கி சின்னாபின்னப்படுத்திய போது மத்திய அரசு தமிழகத்திற்கு போதிய நிதியை ஒதுக்கவில்லை என புகார் தெரிவித்தார்.
 
மத்திய அரசின் புறக்கணிப்பால் தமிழகம் பெரிய பின்னடைவை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
 
மேலும் பேசிய அவர் மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களை அறிவிக்கிறீர்கள். ஆனால் உண்மையில் நடப்பது என்ன என வினவிய அவர், சீனா மற்றும் வங்கதேசத்தில் இருந்து இங்கு வந்து குவிக்கப்படும் நுகர் பொருட்களால் நமது நாட்டில் சிறு தொழில்கள் வேகமாக அழிந்து வருகின்றன.
 
ஆனால் நீங்களோ வெளிநாட்டு பொருட்கள் இங்கு குவிக்கப்படுவதை ஊக்குவிக்கிறீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
 
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி முடிவாகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், மத்திய அரசு மீதான தம்பிதுரையின் சரமாரியான விமர்சனம் இருகட்சிகளிடையே உருவாகியுள்ள கூட்டணியில் உள்ள விரிச்லை காட்டுவதாக உள்ளது