தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் 77 சதவீதம் முதுநிலை பொறியியல் படிப்பு இடங்கள் காலியாக இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 332 பொறியியல் கல்லூரிகளில் 16 ஆயிரத்து 728 எம்.இ.; எம்.டெக் உள்ளிட்ட படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன.

இவற்றில் சேருவதற்காக நடத்தப்பட்ட கேட் மற்றும் டான்செட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற்றது.

கலந்தாய்விற்கு 6 ஆயிரத்து 736 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் 3 ஆயிரத்து 891 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்று பாட பிரிவுகளையும், கல்லூரிகளையும் தேர்வு செய்தனர்.

இதனால் தற்போது பொறியியல் கல்லூரிகளில் 23 சதவீத முதுநிலை படிப்பு இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாகவும் 12 ஆயிரத்து 837 இடங்கள் காலியாக இருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.