கொரோனா தடுப்பு மருந்தை பரிசோதித்து முடித்துவிட்டதாக உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடித்து, அதனை மனிதர்கள் மீது பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவிட்-19 தடுப்பு மருந்தை முழுவதுமாக பரிசோதனை செய்து முடித்துவிட்டதாக ரஷ்யாவைச் சேர்ந்த கமலேயா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.

இதுபற்றி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ, “கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்கள் மீது பரிசோதனை செய்து பார்த்தோம். இதுதொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டன.

தற்போது தடுப்பூசியை பதிவு செய்வதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உலகம் முழுவதும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வரும் கொரோனா வைரஸிற்கு விரைவாக தீர்வு காண வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.

எனவே வரும் அக்டோபர் மாதம் தடுப்பூசியை அறிமுகம் செய்து பொதுமக்களுக்கு உபோயோகிக்க திட்டமிட்டுள்ளோம். இதனை படிப்படியாக செயல்படுத்த உள்ளோம். இது உலகில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். மக்கள் யாரும் இனி அச்சப்பட தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து சோதனைகளை முடித்துவிட்டதாக அறிவித்த முதல் நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது. இந்நாட்டில் இன்று காலை நிலவரப்படி 856,264 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 14,207 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வாசிக்க: தமிழகத்தில் முதல் முறையாக 109 பேர் கொரோனா பலி; அரசு மருத்துவமனைகளில் மட்டும் 86 பேர்