குஜராத் மாநிலத்தில் நர்மதை ஆற்றின் அணைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை வரும் 31ம் தேதி பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார். இதற்கு அப்பகுதி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் பிறந்த சர்தார் வல்லபாய் பட்டேல் காந்தியின் படுகொலைக்கு பின்னர் அர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்த பட்டேல் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிறார்.

இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த இவர், சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவை ஒருங்கிணைத்ததில் முக்கிய பங்காற்றியவர். இவருக்கு குஜராத்தி என்பதால் சிலை வைக்க அம்மாநில முதல்வராக இருந்தபோது நரேந்திர மோடி திட்டமிட்டார். அதன்படி கடந்த 2013ம் ஆண்டு நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமிலிருந்து 3.2 கி.மீ தொலைவில் சாதுபெட் என்ற இடத்தில் சிலை அமைக்க அடிக்கல் நாட்டினார். இந்த சிலைக்கான வேலை சீனாவில் நடந்தது. மேக் இன் இந்தியா பற்றி பேசும் பிரதமர் 3000 கோடிகள் ரூபாய் பணியை ஏன் சீனாவுக்கு தர வேண்டும் என்று எதிர்கட்சிகள் கேள்விகள் எழுப்பின..

இதையடுத்து ‘ஒருமைப்பாட்டு சிலை’ என பெயர் சூட்டப்பட்டு, சுமார் 182 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமாக சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. தற்போது சிலை அமைக்கும் பணிகள் அனைத்தும் முடிந்து, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி அவரது சிலையைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி சிலையை திறந்து வைக்க அப்பகுதி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பு மற்றும் நில வசதிகள் செய்து தருவதாக மோடி அரசு கூறிய நிலையில், இதுவரை எந்தவொரு சமூகநலத்திட்டமும் தங்கள் பகுதியில் செயல்படுத்தப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மோடி சிலையை திறந்தால் அந்த நாளை நாங்கள் துக்கத்தினமாக கடைபிடிப்போம் என்று நர்மதை ஆற்றங்கரையோரங்களில் உள்ள 72 ஊர்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் அறிவித்துள்ளனர்.