கொரோனா வைரஸ் பரவலை மத்திய அரசு கையாளுதல் குறித்து விமர்சித்த பதிவுகளை தடை செய்யுமாறு மத்திய அரசு ட்விட்டர் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியதை அடுத்து பிரபலங்கள் உள்பட பலரின் ட்வீட்டுகளும் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த 24மணி நேரத்தில் கொரோனாவால் 3,49,313 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,69,51,769ஐ கடந்துள்ளது.

அதேபோல் கொரோனா பலி எண்ணிக்கை 2,761 அதிகரித்து, மொத்தம் 1,92,310 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,40,78,081 பேர் குணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கைகள், மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

[su_image_carousel source=”media: 23004,23003″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]

கொரோனாவால் உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறையக்கூடும் என்றபோதிலும், ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப்பிரிவு படுக்கைகள் போதிய எண்ணிக்கையில் இல்லாததால் கொத்துக்கொத்தாக கொரோனா மரணங்கள் நிகழ்கின்றன.

கொரோனா பாதிப்பால் இந்திய மக்கள் படும் துயரங்களையும் அரசின் நடவடிக்கையின்மையையும் சுட்டிக் காட்டி விமர்சித்தும் ஏராளமான பதிவுகள் சமூகவலைதளங்களில் வலம் வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இதுவரை எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காததால் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று #ResignModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது.

இதனையடுத்து கொரோனா நெருக்கடியை, மத்திய மோடி அரசு கையாளும் விதம் குறித்து ட்விட்டரில் விமர்சித்து வெளியிட்ட பிரபலங்கள் உள்ளிட்ட பலரின் பதிவுகளை நீக்கும்படி, ட்விட்டர் நிறுவனத்தை கோரியுள்ளது மோடி அரசு.

இத்தகயைப் பதிவுகள், இந்தியாவின் ஐடி சட்டங்களுக்கு எதிரானது என்று குறிப்பிட்டு ட்விட்டர் நிறுவனத்திடம் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனது செயல்பாட்டை, மக்களுக்கானதாக மாற்றிக்கொள்ள முயலாத மோடி அரசு, இதுபோன்ற கருத்து சுதந்திரங்களை நசுக்கி தொடர்ந்து மக்களை வஞ்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, சில பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள், மோடி அரசின் கொரோனா கால செயல்பாடுகள் குறித்து வெளியிட்ட பதிவுகளை நீக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம். குறிப்பாக எம்பி ரேவந்த் ரெட்டி, மேற்கு வங்க அமைச்சர் மோலாய் காதக், நடிகர் வினீத் குமார் சிங், படத்தயாரிப்பாளர்கள் வினோத் காப்ரி, அவினாஷ் தாஸ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

முன்னதாக விவசாயிகள் போராட்டத்தின் போது பாஜக மோடி அரசை விமர்சித்ததற்காக பலரின் ட்வீட்டர்கள் முடக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் ட்விட்டர் கணக்குகளை முடக்கி நாட்டு மக்களின் கருத்து சுதந்திரத்தை மத்திய பாஜக மோடி அரசு பறித்துள்ளதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.