பிரதமர் மோடி தத்தெடுத்த வாரணாசி தொகுதியில் மக்கள் உணவும் நிதியும் இல்லாமல் இன்னல்களில் உள்ளனர் என ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்ட ஸ்க்ரால் இதழின் பத்திரிக்கையாளர் சுப்ரியா சர்மா மீது பாஜகவின் யோகி அரசாங்கம் வழக்குப்பதிவு செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதிக்கு உட்பட்ட டோமரி என்ற கிராமம் பிரதமர் நரேந்திர மோடியால் சன்சாத் ஆதர்ஷ் கிராம யோஜனாவின் கீழ் தத்தெடுக்கப்பட்டது. இந்த கிராமத்தை சேர்ந்த மாலாதேவி ஒரு வீட்டுப் பணியாளர் என்றும், ரேஷன் கார்டு இல்லாததால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டதாகவும் பத்திரிக்கையாளர் சுப்ரியா சர்மா செய்தி வெளியிட்டுள்ளார்.

சுப்ரியா சர்மா ஸ்க்ரால் இதழில் வெளியிட்ட செய்தியில், “என் வறுமையையும் சாதியையும் கேலி செய்கிறார்கள். ஊரடங்கில் நானும் எனது குழந்தைகளும் பசியுடன் இருந்தோம்” என மாலாதேவி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில், “பத்திரிகையாளர் தன்னை தவறாக மேற்கோள் காட்டியதாக மாலாதேவி குற்றம் சாட்டியதாக தெரிவிக்கின்றனர். மாலா தேவி ஒரு வீட்டு பணியாளர் அல்ல என்றும், அவர் வாரணாசி நகர நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மாலாதேவி ஊரடங்கின் போது தனது குடும்ப உறுப்பினர்கள் யாரும் எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளார்” எனக் காவல்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு பத்திரிக்கையாளர் சுப்ரியா மீது உத்தர பிரதேச அரசு 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஆனால் இந்த வழக்குத் தொடர்பாக போலி புகார்களை தயார் செய்து திட்டமிட்டு காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பத்திரிக்கையாளர் சுப்ரியாவின் மீது வழக்குபதிவு செய்ததற்கு ஊடகக் குரல்கள் முடக்கப்படுவதாகவும் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்றும் பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வாசிக்க: மும்பை பாஜக பொதுச்செயலாளர் மீது வங்கி மோசடி வழக்கு பதிவு செய்த சிபிஐ