குஜராத் கலவரம் தொடர்பாக மோடியை விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மீதான வழக்கு 19-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

கடந்த, 2002ல், குஜராத்தில், நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, கோத்ரா ரயில்வே ஸ்டேஷனில், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சில பெட்டிகள், வன்முறையாளர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டன. 59 பேர் உயிரிழந்தனர்.

இதை கண்டித்து மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. அப்போது குஜராத் முதல்-மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார். அவர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, நரேந்திர மோடிக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததால் அவரை 2012-ம் ஆண்டு கலவர வழக்கில் இருந்து விடுவித்தது. இந்த கலவரத்தில் முன்னாள் எம்.பி. இசான் ஜாப்ரி என்பவரும் கொல்லப்பட்டார்.

அவருடைய மனைவி ஜாகியா ஜாப்ரி, நரேந்திர மோடியை கலவர வழக்கில் இருந்து விடுவித்த சிறப்பு புலனாய்வு குழுவின் முடிவை எதிர்த்து குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவருடைய மனுவை குஜராத் ஐகோர்ட்டு கடந்த ஆண்டு நிராகரித்தது.

இதை எதிர்த்து ஜாகியா ஜாப்ரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு வரும் 19-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், தீபக் குப்தா ஆகியோர் தலைமையில் விசாரணைக்கு வர உள்ளது.

2019ல் பொது தேர்தல் வரும் சமயத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வருவது மோடி தலைமையில் இயங்கும் பாஜகவுக்கு பதட்டத்தை கொடுத்துள்ளதாக அக்கட்சியின் செய்திகள் தெரிவிகின்றன