கன்னியாகுமரி அருகே வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி ரேத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கு தென்கிழக்கே 170கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.

Special Correspondent

புயல் சின்னம் காரணமாக அடுத்த 36 மணி நேரத்திற்கு தென்தமிழகத்தில் மிக கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழக, தென் கேரள மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியது. இது கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் 210 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் மீனபிடிக்க செல்லவில்லை. தஞ்சை, நாகை, ராமநாபுரம், மாவட்ட கடலோரப் பகுதிகளிலும் கடல் சீ்றறம் இருப்பதால் அப்பகுதி மீனவர்களும் மீனபிடிக்க செல்லவில்லை.

கனமழை காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று(நவ.,30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 3 நாட்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பதிவில் கூறியதாவது,
குமரி கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள புயல் சின்னத்திற்கு, 'ஒகி' (ockhi) என பெயரிடப்படலாம். இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விரைவில் அறிவிக்கும். குமரி அருகே மையம் கொண்டுள்ள புயல் சின்னத்தின் மைய பகுதியை ரேடாரில் காண முடிகிறது.

இந்த புயல் சின்னம் கரை பகுதிக்கு வராது. கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் கடற்கரையோரமாக பயணிக்கும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தற்போது காற்று வேகமாக வீசி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வருகிறது. திருச்செந்தூர் பகுதியில் மணிக்கு 40 - 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

'வர்தா' புயல் போல், இந்த புயல் சின்னம் கரை பகுதியை கடக்காது என்பது நல்ல செய்தி. இதனால் கடும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும், மணிக்கு 60 - 70 கி.மீ., வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உண்டு. குமரி கடலில் அலைகள் ஆக்ரோஷமாக காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.