தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Special Correspondent

தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி சென்றார். ஆனால், தடையை மீறி தூத்துக்குடி சென்றதற்காக விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 15 நாட்கள் புழல் சிறையில் அடைக்க திருக்கோவிலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது, 'தூத்துக்குடியில் 13 பேரை கொலை செய்த போலீஸ் அதிகாரிகள் மீது ஒரு வழக்குக் கூட பதிவு செய்ய துப்பில்லாத அதிமுக அரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் அவர்களை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காவல்துறையை காவி மயமாக்கும் முதல்வர் பதவி விலகுவதே மக்களுக்கு பாதுகாப்பு' என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மேலும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஞாயிறன்று மதுரை வந்த ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது "தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் தூத்துக்குடி இந்தியாவிற்குள்தான் உள்ளது. ஆனால் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இது மிகவும் வெட்கக்கேடானது. மோடி என்ன வெளிநாட்டு பிரதமரா என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது" என்றார்.